குஜராத், மஹாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது... பொன்னார் தகவல்!
குஜராத், மஹாராஷ்டிராவில் உணவின்றி தவிக்கும் மீனவர்களுக்கு தேவையான உதவிகளை அந்த மாநில அரசுகள் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் : குஜராத், மஹாராஷ்டிராவில் உணவின்றி தவித்த மீனவர்களுக்கு தேவையான உதவிகளை அந்த மாநில அரசுகள் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அந்த மாநில அரசுகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குஜராத்,மஹாராஷ்டிராவில் மீனவர்கள் உணவின்றி தவிப்பதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக அந்த மாநில நிர்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது.
அவர்கள் மாவட்ட நிர்வாகத்தினரை அனுப்பி உதவி செய்துவிட்டதாக சொல்லி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளோம். இரண்டு மாநில அரசாங்கத்திலும் கூட மீனவர்களை படகில் ஊர் திரும்புவதாக சொல்லி இருக்கின்றனர். அவ்வாறு ஊர் திரும்புவதாக இருந்தால் அதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு குறித்த முன் அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்ட மக்களை சென்றடைந்ததாக தெரியவில்லை. அழிவுகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும், மாநில அரசாங்கம் தரும் சேதப்பட்டியல் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய குழு வந்து ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. புயல் பாதிப்புகள் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜ்ஜுஜுவையும் சந்தித்துள்ளேன் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.