கலாம் விட்டுப் போன "புயலைத் தாண்டினால் தென்றல்".. நிறைவு செய்கிறார் பொன்ராஜ்
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதி வந்த விஷன் தமிழ்நாடு நூலை, அவரது அறிவியல் ஆலோசகரான வி. பொன்ராஜ் முடிக்கவுள்ளார்.
இந்த நூலை விரைவாக எழுதி 3 மாத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வி. பொன்ராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பாக நடந்த கலாம் இரங்கல் நிகழ்ச்சியில் பேசிய பொன்ராஜ் கூறுகையில், இந்த நூலின் ஏழு அத்தியாயங்களை கலாம் முடித்துள்ளார். இதுகுறித்து அவர் என்னுடன் பலமுறை ஆலோசித்துள்ளார். எனவே என்னால் விரைவாக இந்த நூலை முடிக்க முடியும். 3 மாதத்திற்குள் இது மக்களைச் சென்றடையும்.
இந்த நூலுக்கு புயலைத் தாண்டினால் தென்றல் என கலாம் பெயரிட்டுள்ளார். 250 பக்கங்கள் கொண்டது இது. தமிழகம் ஒவ்வொரு துறையிலும் அடைய வேண்டிய வளர்ச்சி குறித்து இதில் விவரித்துள்ளார் கலாம்.
இது தமிழில் எழுதப்பட்டுள்ள நூலாகும். இதற்கு முன்பு கலாம் எழுதிய விஷன் 2020 நூலுக்கும், இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. முற்றிலும் வேறுபட்ட நூல் இது.
கலாம் தனது வாழ்நாளில் 17 மாநில சட்டசபைகளில் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இருந்தாலும் தமிழக சட்டசபையில் அவர் பேசியதே இல்லை. இது அவருக்குள் ஒரு வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
தான் பிறந்த மாநிலம் வளர்ச்சி அடைவதைப் பார்க்க கலாம் பெரும் ஆவலுடன் இருந்தார். அதற்காகவே இந்த நூலை எழுதி வந்தார் என்றார் பொன்ராஜ்.