எனக்கு யாரையும் தெரியாது, நான் யாரையும் மிரட்டவும் இல்லை... வடிவேலு விளக்கம்
மதுரை: எலி படத் தயாரிப்பாளர் தன் மீது புகார் கொடுத்திருப்பது குறித்து நடிகர் வடிவேலு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அந்தத் தயாரிப்பாளரை தான் மிரட்டவில்லை என்றும், அவர் கூறியுள்ள முன்னாள் திமுக எம்.எல்.ஏ. வி.பி. துரைசாமியை தனக்குத் தெரியாது என்றும், பைனான்சியர்களிடமிருந்து தப்புவதற்காக தன் மீது அந்தத் தயாரிப்பாளர் புகார் கூறியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்த படம் எலி. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எனவே ஓடவில்லை. இந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அப்புகாரில், ரூ 12 கோடிக்கு இந்தப் படம் எடுக்கப்பட்டது. அதில் வடிவேலுவுக்கு சம்பளமாக மட்டும் ரூ 8 கோடி கொடுக்கப்பட்டது. படம் வெளியாவதற்கு முன்பே ஒரு சேனலில் ரூ 10 கோடி வரை தரத் தயாராக இருந்தும் அதனை வாங்க விடாமல் வடிவேலு தடுத்துவிட்டார்.
அதுமட்டுமின்றி, வேறு சேனல்கள் எதுவும் இந்தப் படத்தை வாங்காமல் விட்டதால், தனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இவை அனைத்துக்குமே வடிவேலுதான் காரணம்.
இந்தப் படத்தை எடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பு என்னை அழைத்துப் பேசிய வடிவேலு, இப்படத்தை ராம்குமார் என்பவர் ஆரம்பித்தார். ஆனால் அவரிடம் செலவு செய்ய பணம் இல்லை. இந்தப் படம் கண்டிப்பாக வெளியாக வேண்டும். இல்லாவிட்டால் நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று உருக்கமாக பேசினார். இதனால் நானே படத்தைத் தயாரிக்க முன்வந்தேன்.
எனது நண்பர்களுடன் சேர்ந்து, 17 கோடி ரூபாயில் சிட்டி சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம், எலி படத்தை தயாரித்தேன். படத்தை 32 கோடிக்கு விற்பனை செய்து தருவதாக, வடிவேலு உறுதி அளித்தார். ஆனால், படம் சரியாக ஓடவில்லை; எனக்கு, 9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
என் மூலம் எலி படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள், பட வினியோகஸ்தர்கள் பொய்க் கணக்கு காட்டி கூடுதலாக பணம் கேட்டு மிரட்டினர். இதனால், வடிவேலுவிடம் நஷ்டஈடு கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்தார். அத்தோடு, பட இயக்குனர் யுவராஜ், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.துரைசாமி, வடிவேலுவின் மேனேஜர் பன்னீர், அக்கவுன்டன்ட் முத்தையா ஆகியோரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து தற்போது மதுரையில் இருக்கும் வடிவேலு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், முதலில் ராம்குமார் என்பவர் தயாரிக்க இருந்தார். நிதி வசதி போதாது என்பதால், ஒதுங்கிக் கொண்டார். இதையறிந்த, தயாரிப்பாளர் சதீஷ்குமார், அந்தப் படத்தை தயாரிக்க முன் வந்தார்.
படம் வெளியான பின்னர் அவர் என்னிடம் வந்து, எதிர்பார்த்தபடி ஓடவில்லை; நஷ்டமாகி விட்டது. அடுத்து, ஒரு படம் நடித்து கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றார். நானும், சம்மதித்தேன்.
தயாரிப்பாளர் போலீசில் புகார் செய்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் நல்ல மனிதர். அவர் இப்படி புகார் கொடுக்க, தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். பைனான்சியர்கள் மிரட்டலால், புகார் மூலம் என்னை காரணம் காட்டி, அவர்களை சமாளிக்க முற்பட்டிருக்கலாம்.
சதீஷ்குமாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பிரமுகரை எனக்கு தெரியாது. சதீஷ்குமாருக்கும், எனக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. நான் அவரை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. தற்போது நான் மதுரையில் இருக்கிறேன்.
எனக்கு பேசிய சம்பளத்தில் கூட, இரண்டு கோடி ரூபாய் மட்டும் கொடுத்தார். மீதி சம்பளத்தை தரவில்லை. நஷ்டம் என்று கூறியதால், நானும் பாக்கி சம்பளத்தை கேட்கவில்லை. ஒரு நடிகன் என்ற வகையில் இதை தான் நான் செய்ய முடியும் என்றார் அவர்.