தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் யோகா, மல்யுத்தம், கிடா சண்டை சிற்பங்கள்.. வியந்து பதிவிட்ட வைகோ
தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற வைகோ, அங்குள்ள சிற்பங்களை அணு அணுவாக ரசித்துள்ளார்.
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு சென்ற வைகோ அங்குள்ள சிற்பங்களை அணு அணுவாக ரசித்துள்ளார். அதனை தனது முகநூல் பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டுள்ளார் வைகோ.
காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்; ஓஎன்ஜிசி வெளியேறாவிட்டால் அதன் கருவிகளையும் வாகனங்களையும் உடைக்க ஏற்பாடு செய்வேன் என தஞ்சையில் வைகோ எச்சரிக்கை விடுத்திருந்தார். பின்னர் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்ட மாதிரிமங்கலத்துக்கு வைகோ சென்றார். அதற்கு முன்னதாக தாராசுராம் ஐராவதீஸ்வர் கோவிலுக்கு சென்று சோழர் கால கட்டிடக் கலையை ரசித்தார் வைகோ.
தற்போது சோழ மன்னர்கள் கட்டிய அக்கோவிலின் சிற்பங்கள் குறித்து வைகோ தமது முக நூலில் எழுதியுள்ளதாவது:
ஏழுவிதமான படிகள்
தாராசுரம் ஐராவதீஷ்வரர் கோவில்- நுழை வாயிலில் உள்ள நந்தி.... இதன் அருகில் தான் ஏழு விதமான ஒலி கேட்கும் படிக்கட்டு..
யோகா
யோகா கலையை இங்கு யாரோ இப்பதான் பூமிக்கு அடியில் தோண்டி எடுத்து வந்தது போல பிதற்றிக் கொள்கிறார்கள். இதோ பண்டைத் தமிழர்களின் கலைச்சிற்பத்தில். முதல் படத்தில் ஒரே சிற்பத்தில் மூன்று விதமான யோகா கலையை குறிக்கும் அற்புதமான படைப்பு..
வாலி மீது அம்பு
வாலியும் சுக்கீரவனும் சண்டையிடும் போது நீதிக்கு பொறம்பாக மறைந்து நின்று, இராமன் வாலியின் மீது அம்பு எய்து கொன்ற இராமாயணக் காட்சி.
ஓதுவார்கள்
108 ஓதுவார்கள் சிலையும், அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
மல்யுத்தம்
ஜிம்னாஸ்டிக் (மல்யுத்த உடற்பயிற்சி) கலையை குறிக்கும் அற்புதமான சிற்பம்
சந்தன கல்
சந்தனம் அரைக்கும் கல். சந்தனம் அரைக்கும் போது பேஸ்ட் தங்குவதற்கு ஏதுவாக தேவையற்ற நீர் வெளியேற சிறு துளையுடன் கூடிய அரவைக்கல். சிறு துவாரம் காண படத்தை பெரிதாக்கி பார்க்கவும்.
வள்ளி குறத்தி சிலை
முருகன், தெய்வானை_வள்ளிக்குறத்தி சிலை. தெய்வானைக்கு பட்டுச்சேலையும், வள்ளிக்கு குறவர்கள் அணியும் பாவாடை அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் சிறப்பு. வள்ளியின் மூக்கில் மூக்கூத்தி அணிய சிறு துவாரமும், காது மடலின் மேற்பகுதியில் ஒரு துவாரமும் உள்ளது. இது குறவர்கள் மூக்கிற்கும் காதுக்கும் ஒருவிதமான லோலாக்கு மாட்டுவதை குறிக்க்கிறது. என்னவொரு நுண்ணிய சிற்ப தொழில் நுட்பம்.
கிடா சண்டை
ஜல்லிக்கட்டு தடை கோரும் மடையர்கள் காண வேண்டிய சிற்பம். கிடா சண்டையில் வென்றவர் ஆர்ப்பரிப்பதும், தோற்றவர் தலையில் கைவைத்து கவலையுடன் இருக்கும் சிற்பம். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, கிடா, கோழிசண்டை போன்றவற்றை இன்றல்ல நேற்றல்ல ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் நாங்கள் பண்பாட்டு நிகழ்வாக கொண்டாடுகிறோம் என்று பீட்டா மடையர்களுக்கு புரியட்டும்.
இவ்வாறு வைகோ பதிவிட்டுள்ளார்.