முக்கியமான 5 அணைகளை தூர்வார நடவடிக்கை... தமிழக அரசுக்கு வைகோ பாராட்டு
சென்னை : தமிழகத்தில் உள்ள முக்கியமான 5 அணைகளை தூர்வார நடவடிக்கை மேற்கொண்டதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வார கோருவது மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இயற்கை எரிவாயு எடுக்க முயற்சிக்கும் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. இந்த மனு தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரரான தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் சார்பில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசு சார்பில் கோகுலகிருஷ்ணன், மற்றும் வழக்கறிஞர்கள் சிவ.ராஜசேகரன், அருள்ராஜ் ஆகியோர் ஆஜராகினர். இவர்களுடன் ஸ்ரீவைகுண்டம் அணைநீர் பிடிப்பு குளங்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனும் ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பாயத்தில் இருந்து வெளியே வந்த வைகோ, செய்தியாளர்களிடம் கூறியதாவது...
ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணியை பருவ மழை தொடங்குவதற்கு முன்பு வேகமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தும், இன்னமும் பணிகள் முறையாகத் தொடங்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள அணைக்கட்டுகள், குளங்களிலும் தூர் வாரும் பணியைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது.
அதன்படி ஸ்ரீவைகுண்டம் அணை நீர்பாசனம் பெறும் 53 குளங்களிலும் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும் என்ற உடன் ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணியோடு 53 குளங்களிலும் தூர்வாரும் பணி நடைபெறும் என்று பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் தீர்ப்பாயத்தில் கூறினார்.
தொடர்ந்து அரசுத் தரப்பு வழக்கறிஞர், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளர் அனுப்பியுள்ள கடிதத்தைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார். அதன்படி தமிழ்நாட்டில் ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி நடைபெறுவது போல, தேனி மாவட்டத்தில் வைகை அணை, கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை, சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை, திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஆகிய ஐந்து அணைகளிலும் தூர்வாரும் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தீர்ப்பாயம் தந்த ஆணையால், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஐந்து அணைகளில் தூர்வாரும் பணியைச் செய்ய தமிழக அரசு முன்வந்ததை மனதாரப் பாராட்டி வரவேற்கிறேன்''.
இவ்வாறு வைகோ கூறினார்.