சிட்டா வழங்க தே.மு.தி.க கவுன்சிலரிடம் லஞ்சம்: வி.ஏ.ஓ பட்டத்து அய்யன் கைது!
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே தேமுதிக கவுன்சிலரிடம் ரூ.18 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் மருதமுத்து. அதே பகுதியில் பேரூராட்சி 1-வது வார்டு தே.மு,தி.க கவுன்சிலராக உள்ளார்.
இவருக்கு கொடைக்கானல் அருகே உள்ள வடகவுஞ்சியில் 6.80 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். இங்கு மின்மோட்டார் பொருத்துவதற்கு மின்வாரியத்தில் மனு செய்துள்ளார்.
மின்துறை அலுவலர்கள் இந்த விவசாய நிலத்திற்கு சிட்டா, அடங்கல் இருந்தால்தான் மின்சாரம் வழங்கமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 40 நாட்களுக்கு முன்பு வடகவுஞ்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் தனது நிலத்துக்கான சிட்டா அடங்கல் கேட்டு மருதமுத்து மனு செய்துள்ளார். அப்போது அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் பட்டத்துஅய்யன் சிட்டா அடங்கல் கொடுக்க வேண்டும் என்றால் ரூ.18 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து மருதமுத்து முன்பணமாக ரூ.15 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் மீதி ரூ.3 ஆயிரம் கொடுத்தால்தான் சிட்டா அடங்கல் கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த தே.மு,தி.க கவுன்சிலர் மருதமுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மருதமுத்துவிடம் ராசாயனம் பவுடர் தடவிய ரூ.3 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். அதனை கிராம நிர்வாக அலுவலரிடம் தே.மு.தி.க கவுன்சிலர் மருதமுத்து வழங்கியுள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் பட்டத்துஅய்யனை கைது செய்தனர். கைதானஅவர் மதுரையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications