கர்நாடக வன்முறை: தமிழர்களுக்கு ரூ25,000 கோடி இழப்பீடு வழங்க திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: கர்நாடக வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ரூ25,000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
கர்நாடகத்தை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு சிறுபாதிப்பும் இல்லாத வகையில் முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது அரசியல் அரங்கில் ஒரு வரலாற்று பதிவாகும்.
அனைத்து கட்சி கூட்டம்
தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.
ரூ25,000 கோடி நட்ட ஈடு
காவிரி நீர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் இழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கர்நாடகத்தில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் ரூ.25,000 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் இணைந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
சதனாந்த கவுடாவை நீக்குக
பிரதமர் உடனடியாக புதுச்சேரி உள்பட தென் மாநில முதல்வர்களை அழைத்து நதிநீர் சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும். தேதிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசிய மந்திய அமைச்சர் சதானந்தா கவுடாவை நீக்க வேண்டும்.
ஒன்றிணைந்து போராட வேண்டும்
நதிநீர் உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் ஆளுங்கட்சி எதிர் கட்சி என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைத்து போராட வேண்டும். ஆளும் கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்காதது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.