தமிழ்நாடு என பெயர்சூட்டக் காரணமான சங்கரலிங்கனாருக்கு சிலை நிறுவ வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை
தமிழ்நாடு என பெயர்சூட்டக் காரணமான சங்கரலிங்கனாருக்கு சிலை நிறுவ திருமாவளவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சென்னை : தமிழ்நாடு பெயர் சூட்டலுக்கு பொன்விழா அறிவிக்கப்பட்டதை வரவேற்பதாகவும், அதற்கு காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு சிலை நிறுவ வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
தமிழ்நாடு என பெயர் சூட்டலுக்கு பொன்விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனை பாராட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழ்நாடு என பெயர் சூட்டக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். திருமாவளவன் அறிக்கை:

பெயர் சூட்டிய அண்ணா
சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டிருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேறிஞர் அண்ணா ஆவார். 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது. அதன் பொன்விழா ஆண்டு இப்போது துவங்கவுள்ளது. அதைத் தமிழக அரசு சார்பில் விழாவாக கொண்டாடப்போகிறோம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தியாகி சங்கரலிங்கனாரின் போராட்டம்
இந்த அறிவிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். வரலாற்றில் நிலைத்திருக்கும் விதமாக இந்த பொன்விழா ஆண்டைக் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாடு என பெயர்சூட்ட வேண்டுமென தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டு உயிரிழந்தார் என்பது வரலாறு. அவர் கண்ட கனவு பேரறிஞர் அண்ணா அவர்களால் தான் நனவாகியது.

சிறப்பான முறையில் விழா
தற்போது தமிழக அரசு பொன்விழா குறித்து சில அறிவிப்புகளை செய்துள்ளது. அது வரவேற்கத்தக்கது என்றாலும் இன்னும் சிறப்பாக இதை நாம் நடத்த வேண்டும். தமிழக அரசு மட்டுமே இதை நடத்துவதைவிடவும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இந்த விழாவை நடத்துவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

நினைவுத் தூண் எழுப்ப வேண்டும்
தமிழ்நாடு பொன்விழாவைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் பங்கேற்கும் விதமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், இந்த வரலாறு எதிர்வரும் தலைமுறையினருக்கும் தெரியும் விதமாக தியாகி சங்கரலிங்கரனாரின் முழு உருவச் சிலையை நிறுவுவதோடு சென்னையில் பொன்விழா நினைவுத் தூண் ஒன்றை எழுப்பவேண்டுமெனவும் மாண்புமிகு முதல்வரை வலியுறுத்துகிறோம்.












Click it and Unblock the Notifications