எம்.எல்.ஏ. அவர்களே! ஓபிஎஸ்ஸை ஆதரியுங்கள்.. பரபர 'வேடசந்தூர்' வாக்காளர்களின் போஸ்டர்!
முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரியுங்கள் என்று வேடசந்தூர் வாக்காள பெருமக்கள் அத்தொகுதி எம்எல்ஏ வி.பி.பி. பரமசிவத்திற்கு போஸ்டர் அடித்து வேண்டுகோள் வைத்துள்ளனர்.
வேடசந்தூர்: தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. தலைவர்கள் ஆதரவு மட்டுமல்லாமல் பொதுமக்களின் ஆதரவு அவருக்கு பலம் சேர்த்து வருகிறது.
அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டு ஓபிஎஸ் அணியாகவும், சசிகலா அணியாகவும் பிரிந்து கிடக்கும் நிலையில், எம்எல்ஏக்கள் ஆதரவு யாருக்கு என்பதை ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் சொல்லாமல் அமைதி காத்தி வருகிறார்கள். எங்கே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருக்கும் மன்னார்குடி அடியாட்கள் எம்எல்ஏக்களை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, வேடசந்தூர் தொகுதி வாக்காள பெருங்குடி மக்கள் தாங்கள் விரும்பியதை அழகான போஸ்டரில் அச்சடித்து வெளிப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியில், தமிழக முதல்வராக ஓபிஎஸ்ஸுக்கும், அதிமுகவின் தலைவராக தீபாவிற்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இந்தத் தொகுதியின் எம்எல்ஏவிற்கு அன்பு வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி எம்எல்ஏவான வி.பி.பி. பரமசிவத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அந்த சுவரொட்டி வேண்டுகோளில் முடிவில் இவண் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள் மற்றும் தங்களுக்கு வாக்களித்த வேடசந்தூர் சட்டமன்ற வாக்காள பெருமக்கள் என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது.
இதுதவிர, எம்எல்ஏ பரமசிவத்திற்கு வேடசந்தூர் தொகுதி மக்கள் தங்களது செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப் மூலம், ஓபிஎஸ்ஸை ஆதரிக்க வேண்டும் என்ற தகவல்களையும் அனுப்பி வருகின்றனர்.