பசுமைப் பண்ணை காய்கறிகடையில காய் வாங்கியிருக்கீங்களா?
புரட்டாசி மாசம் சிக்கன், மட்டன், மீன் என அசைவ உணவ சாப்பிட தடா போட்டதால் ஞாயிறன்றும் காய்கறி கடைகளைத் தேடித்தான் போக வேண்டியுள்ளது.
பக்கத்தில் உள்ள மார்க்கெட்டுக்கு போவதை விட பசுமைப் பண்ணை காய்கறிக் கடைக்கு போய் வாங்கிட்டு வரலாமா? என்று யோசித்ததன் விளைவு நேராக வண்டியை விட்டோம் பக்கத்தில் உள்ள மலிவு விலை காய்கறி கடைக்கு.
நீண்ட கியூ.... பார்த்த உடனே கொஞ்சம் வேர்க்கத்தான் செய்தது. நல்ல வெயில் வேறு. வந்தாச்சே... வரிசையில நின்னு வாங்கிட்டு போயிறலாம் என்று நினைத்தவாரே வரிசையில் நின்றோம்.
மார்க்கெட்டிலும், ஏசி அவுட்லெட்களிலும் காய்கறி வாங்கிய மக்கள் பசுமைப் பண்ணை காய்கறிக்கடைகள் வந்த உடன் ஆவலுடன் வருகிறார்களே அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை வரிசையில் நின்றவாரே கவனிக்கத் தொடங்கினோம்.
காலை 9 மணிக்கு
பசுமைப் பண்ணை காய்கறிக் கடைகள் காலை 9 மணிக்குத்தான் திறக்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான மக்கள் காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் காய்கறிகளை வாங்கி விட வேண்டும் என்று நினைக்கின்றனர். எனவே கடையை கொஞ்சம் சீக்கிரம் திறந்தால் நல்லா இருக்குமே என்கின்றனர்.
விலை மலிவுதான்
பிற சில்லறைக் கடைகளோடு ஒப்பிடும்போது காய்கறிகளின் விலை இங்கு குறைவுதான். ஆனாலும் வெயிலில் வரிசையில் நின்று வாங்கவேண்டுமே என்பதில்தான் சலிப்பு ஏற்படுகிறது. ஒரே ஒரு பில்லிங் அதற்கு நேரமாகிறது. கூடுதல் பில் கவுண்டர் இருந்தால் பரவாயில்லை என்கின்றனர்.
நாம பார்த்து வாங்கணும்
வெண்டைக்காயை காம்பு ஒடித்து பார்த்து எடுப்பதே ஒரு சுகம். அதேபோல தக்காளி, முறுங்கைக்காய் என தொட்டு தடவி எடுத்தால்தான் திருப்தி ஆனால் பசுமைப் பண்ணைக் காய்கறிக் கடையில் விற்பனைப் பிரதிநிதிகள்தான் எடுத்துப் போடுகின்றனர். இதுவே கொஞ்சம் நெருடல்தான்.
பச்சைப் பசேல்
காய்கறிகள் எல்லாம் பச்சைப் பசேல் என்று புத்தம் புதிதாக இருப்பதால் மக்களுக்கு திருப்தியாக இருக்கிறது. என்றாலும் ஏரியாவிற்கு ஏரியா ரேசன் கடைகள் இருப்பதைப் போல 2 காய்கறிக் கடைகளாவது இருந்தால் வசதியாக இருக்கும் என்பது பொதுமக்கள் கருத்து.
29 கடைகள்
சென்னையில் மட்டும் 29 காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சில்லறை விற்பனை செய்யும் காய்கறிக் கடைகளில் வழக்கம் போல காய்கறி விற்பனைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. காரணம் வரிசையில் நிற்க வேண்டாம், நாமே பார்த்து எடுத்துப் போட்டு வாங்கலாம் என்பதோடு பல ஆண்டுகளாக பழகிய காய்கறிக்கடையை திடீரென்று மாற்ற வேண்டாமே என்று நினைப்பதும்தான்.
கிலோ கணக்கில்
ஞாயிறன்று மலிவு விலை காய்கறிக் கடையில் வரிசையில் நிற்பவர்கள் யாரும், ஏழைகளோ, நடுத்தர மக்களோ மட்டும் கிடையாது நன்றாக வசதிபடைத்த காரில் வந்து காய்கறி வாங்கிச் செல்லக்கூடியவர்களும்தான் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை கிலோ கணக்கில் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
எல்லா காய்கறிகளும்
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கத்தரி, தேங்காய், சாம்பார் வெங்காயம் போன்றவை சரியாக கிடைப்பதில்லை என்பதும் பொதுமக்களின் புகாராகும். உள்ளூர் சந்தையில் விலை குறைந்தாலும் மலிவு விலைக் கடைகளில் முன்பு குறிப்பிடப்பட்ட ஆரம்ப விலைக்கே விற்பனை செய்யப்படுவதால் கடை துவக்கப்பட்டபோது இருந்த வரவேற்பு இப்போது இல்லை என்றும் கூறப்படுகிறது.
பணம் மிச்சம்தான்
வெங்காயம் தொடங்கி தேங்காய் வரை எல்லாவற்றிலும் மிச்சம்தான். ஆனாலும் இருப்பிடத்தில் இருந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் வரை நடந்து சென்று வரிசையில் காத்திருந்து காய்கறிகளை வாங்கவேண்டுமே என்பதனால்தான் மக்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.
மாவட்டந்தோறும்
சென்னையில் மட்டும்தான் பசுமைப் பண்ணைக் காய்கறிகடைகள் திறக்கப்பட்டுள்ளன. 10 மாநகராட்சிகளில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது போல தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்கள், தாலுகாக்களிலும் காய்கறிக்கடைகள் திறக்கப்பட்டால் மட்டுமே அனைவருக்கும் இதன் பலன் சென்றடைய வாய்ப்புள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.