டெங்கு கொசு ஒழிப்புக்கு கமிஷன் கேட்ட வேலூர் மாநகராட்சி கமிஷனர்.. கைது செய்து தூக்கிய போலீஸ்!
லஞ்சம் வாங்கிய புகாரில் வேலூர் மாநகராட்சி ஆணையர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் : வேலூர் மாநகராட்சி ஆணையர் குமார் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர் லஞ்சப்பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.
வேலூர் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவேன் என்று செயல்பட்டு வந்த மாநகராட்சி ஆணையர் குமார் லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கான்ட்டிராக்டர் ஒருவருக்கு பணியாட்களை அனுப்பிய விவகாரத்தில் ஊதியத்தை கேட்டதற்கு 2 கமிஷன் லஞ்சமாக கேட்டுள்ளார் குமார். ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் சிக்கிக் கொண்டார்.
வேலூர் வேலப்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஆட்களை பணியில் சேர்த்து விடும் கான்டிராக்டராக உள்ளார். கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சுகாதார பணியாளர்களை அனுப்பியுள்ளார். இதற்காக, பாலாஜிக்கு ரூ.10.23 லட்சம் வழங்க வேண்டும்.
ஊதியப் பணத்துக்கு கமிஷன்
பணியாளர்களின் ஊதியப் பணத்தை வழங்க 2 சதவீத கமிஷன் அடிப்படையில் ரூ. 22 ஆயிரத்தை இன்று வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் குமார். இது குறித்து பாலாஜி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
ஸ்பாட்டில் பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை
இதனையடுத்து அவர்கள் மறைந்திருந்து நோட்டமிட்ட நேரத்தில் ரூ. 22 ஆயிரத்தை பாலாஜி ஆணையர் குமாரிடம் கொடுத்துள்ளார். அந்த நேரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக குமாரை கைது செய்துள்ளனர்.
வீட்டில் சோதனை
இதனிடையே ஆணையர் குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். உயர் பதவியில் உள்ள ஒருவரே லஞ்சம் வாங்கி இருப்பதால் இவர் மீது மேலும் சந்தேகம் வலுத்ததையடுத்து அவரது வீட்டிலும் ஏதேனும் வேறு லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
குப்பைத்தொட்டி ஊழல்
ஆணையர் குமார் மீது ஏற்கனவே குப்பைதொட்டி வாங்கியதில் ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குமாரின் வீட்டில் நடக்கும் சோதனையின் முடிவிலேயே அவர் யார் யாரிடமெல்லாம் லஞ்சம் வாங்கியுள்ளார் என்ற முழு விவரம் தெரிய வரும். எனினும் உள்ளாட்சிப் பணிகளை முழுவதும் கவனித்து வரும் மாநகராட்சி ஆணையரே இது போன்று லஞ்சப் பேயாக இருப்பது வேலூர் மாநகர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.