விவசாயிகள் மரணத்தை கொச்சைப்படுத்துவதா? ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்குக - தி. வேல்முருகன்
வறட்சியினால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் காவிரி டெல்டா மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர். இது தொடர்பாக பண்ருட்டி தி. வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை.
தற்போதுதான் தமிழக அமைச்சர்கள் வறட்சி நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். அப்படி ஆய்வுக்கு சென்ற அமைச்சர்களில் சிலர், விவசாயிகள் நோய்வாய்பட்டு இறந்துபோனதாக கூறியிருப்பதாக பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
அமைச்சர்களின் இத்தகைய பேச்சுகள் விவசாயிகள் மட்டுமின்றி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாக இருக்கிறது. அமைச்சர்கள் வீண் பேச்சுகளை தவிர்த்து விவசாயிகளின் துயரைத் துடைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவை.
அண்டை மாநிலங்களான கர்நாடகாவும் கேரளாவும் பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து தங்களது மாநிலங்களுக்கான வறட்சி நிவாரண நிதியின் ஒரு பகுதியை பெற்றுவிட்டனர். ஆனால் தமிழக அரசோ வறட்சி நிலைமை குறித்து இப்போதுதான் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறது.
அத்துடன் விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர்களும் பேசிவருகின்றனர். இத்தகைய போக்கை கைவிட்டு உடனடியாக எத்தனை விவசாயிகள் மரணித்துப் போயுள்ளனர் என்பது தொடர்பாக தமிழக முதல்வர் உடனே அறிவிக்க வேண்டும்.
மாண்டுபோன விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ25 லட்சம் நிவாரண நிதியை உடனே வழங்கிட வேண்டும்; விவசாய குடும்பங்களின் அத்தனை கடன்களையும் ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.