மன்னவனே அழலாமா.... கண்ணீரை விடலாமா... பழம்பெரும் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் காலமானார்
சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
கே.எஸ்.ஜி என திரையுலகினரால் சுருக்கமாகத் அழைக்கப்பட்ட கே. எஸ். கோபாலகிருஷ்ணன் பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்த கோபாலகிருஷ்ணன், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 70 படங்களை இயக்கி உள்ளார்.
ஜெமினிகணேசன் நடித்த கற்பகம், பணமா? பாசமா?, சிவாஜி கணேசன் நடித்த கைகொடுத்த தெய்வம், குலமா? குணமா?, உள்ளிட்ட படங்களையும், ஜெயலலிதா நடித்த ஆதி பராசக்தி போன்ற வெற்றிப் படங்களையும் இயக்கியவர். நடிகர் கமல்ஹாசன் நடித்த முரடன் உள்ளிட்ட பல்வேறு மலையாளப் படங்களை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
கை கொடுத்த தெய்வம் படத்திற்காக மத்திய அரசின் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். 1975 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வாங்கியுள்ளார். 1992ல் விஜயகாந்த் பானுப்பிரியாவின் 'காவியத் தலைவன்' படம்தான் அவரது கதை வசனத்தின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.