இது என்ன ஒரு பக்கம் டயரே இல்லாம ஓடுது! அரசு பேருந்தில் அலட்சியம்.. ஆனாலும் முதியவர் செய்த "சம்பவம்"
திருப்பத்தூர்: பணிமனை கிளை மேலாளரின் அலட்சியத்தால் அரசு பேருந்து ஒன்று வெறும் மூன்று டயருடன் பயணித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
Recommended Video
திருப்பத்தூரில் சேலம் கோட்டம் தர்மபுரி மண்டலத்திற்கு உட்பட்ட பணிமனை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு நகரப் பேருந்து திருப்பத்தூரில் இருந்து நாட்றம்பள்ளி தொட்டி கிணறு வரை தினமும் இயக்கப்படுகிறது.
இந்த பேருந்து இன்றும் வழக்கம் போலப் பயணிகளை ஏற்றிச் சென்ற போது தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
வெடித்துச் சிதறியது
இன்று வழக்கம் போல தொட்டி கிணறு வரை சென்ற பேருந்து மீண்டும் திருப்பத்தூருக்குத் திரும்பி வரும்பொழுது புதுப்பேட்டைப் பகுதியில் பேருந்தின் பின்புற சக்கரத்தின் டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதையடுத்து ஓட்டுநர் சிவசங்கர் மற்றும் நடத்துநர் குமார் ஆகியோர் தங்களுடைய பணிமனை கிளை மேலாளர் ஆசை லிங்கத்தை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை விளக்கி உள்ளனர்.
அலட்சியம்
சாலை போக்குவரத்து விதிப்படி கட்டாயமாகப் பேருந்தில் ஒரு மாற்றுச் சக்கரம் (ஸ்டெப்னி) வைத்திருக்க வேண்டும். இருப்பினும் ஸ்டெப்னி இல்லாத நிலையில் இதற்கு மாற்று வழியாக எந்த ஒரு ஏற்பாட்டையும் பணிமனை கிளை மேலாளர் செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் ஓட்டுநர் சிவசங்கரிடம் அலட்சியமாக அப்படியே பஸ்ஸை ஓட்டிக்கொண்டு பணிமனைக்கு வருமாறும் கூறியதாகத் தெரிகிறது.
3 டயர்கள்
இதையடுத்து வேறு வழி இல்லாமல் ஓட்டுநர் புதுப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரை சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் பேருந்தின் சக்கரத்தில் டயரே இல்லாமல் சாலையில் ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார். வெறும் 3 டயர்களுடன் அரசு பேருந்து சாலையில் வருவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பான வீடியோவும இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
முதியவர்
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல் செயல்படும் ஓட்டுநர் மற்றும் பணிமனை கிளை மேலாளரை உயரதிகாரிகள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இவ்வளவு அசாதாரண சூழ்நிலையிலும் வயதான நபர் ஒருவர் பந்தரபள்ளி பகுதியில் பேருந்தில் ஏறித் திருப்பத்தூர் வரை எந்த ஒரு சலனமும் இல்லாமல் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.