வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு சகஜம்.. தேமுதிக பிறந்த நாள் மடலில் விஜயகாந்த்!
வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு என்று தேமுதிக தொடக்க நாள் வாழ்த்து மடலில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: தேமுதிக தொடங்கி 13-ஆவது ஆண்டுவிழாவையொட்டி அதன் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள மடலில் வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்த் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த கட்சியை மதுரையில் தொடங்கினார்.
பின்னர் 2006-இல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். மற்ற 233 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துவிட்டனர். எனினும் கணிசமாக வாக்கு வங்கியை தேமுதிக பெற்றிருந்தது.
தேமுதிக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது 13 வது ஆண்டு துவக்க விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/DvnpnkeLZs
— Vijayakant (@iVijayakant) September 14, 2017
இதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக போட்டியிட்டது. இதன் மூலம் 29 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். அதன்பின்னர் 2016-இல் நடைபெற்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில் தேமுதிக தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவு பெற்று 13-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கு கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த் மடலை வெளியிட்டுள்ளார்.
அதில் வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்பதை உணர்வோம். எதற்கும் அஞ்சாமல் எதிர்கால இலக்கை அடைவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.