மக்கள் வேதனையில் இருக்க நான்காண்டு சாதனையை கொண்டாடுகிறது அதிமுக: விஜயகாந்த் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக அரசின் செயலற்ற தன்மையால் தமிழகத்தில் மக்களின் அத்யாவசியத் தேவையான குடிநீர், கல்வி, சாலை, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இதுவா சாதனை? தமிழகத்திற்கு நான்கு ஆண்டு காலமாக அ.தி.மு.க. அரசு கொடுத்த வேதனையாகத்தான் பொதுமக்கள் இதைப்பார்க்கிறார்கள்.
இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: ''புதிதாக மின் உற்பத்தி திட்டங்களை தொடங்காமல், அதிக விலை கொடுத்து தனியாரிடத்தில் மின்சாரத்தை கொள்முதல் செய்வதால், தமிழக மின்வாரியம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் சிக்கித்தவிக்கிறது. தொடர்ந்து மின்வெட்டு தமிழகத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை.
டெல்டா விவசாயத்திற்கு மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டும், கடைமடை பகுதிவரை தண்ணீர் வரவில்லை, குறுவை சாகுபடிக்குத்தான் தண்ணீர் இல்லை, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா? என விவசாயிகள் ஏங்கும் நிலையும், வேளாண்மைத்துறை, வீட்டுவசதித்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை, உணவுத்துறை போன்ற துறைகளின் அதிகாரிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை பல்வேறு நிர்ப்பந்தங்களால் மன உளைச்சல் கொண்டு தற்கொலை செய்துகொள்வதும், வேலையை விட்டு செல்வதும் என்ற அவல நிலைதான் இன்றைய ஆட்சியில் உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியின் முறைகேடு பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அரசின் நிர்வாக திறமையற்ற, செயலற்ற தன்மையால் தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையான கல்வி, சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, சாலைவசதி, வேலை வாய்ப்பு போன்றவை நிறைவேற்றப்படாமல் உள்ளது. விவசாயம் பொய்த்துப்போவதும், நெசவுத்தொழில் நசிந்துபோவதும், தொழிற்சாலைகள் மூடப்படுவதும் போன்ற காரணங்களால் பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்திற்கு சென்று, தினந்தோறும் தமிழகமெங்கும் மக்கள் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ ‘முழுப்பூசணியை இலைச்சோற்றில் மறைக்க' முயற்சித்து, அதை அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை என கூறுகிறார். இதுவா சாதனை? தமிழகத்திற்கு நான்கு ஆண்டு காலமாக அ.தி.மு.க. அரசு கொடுத்த வேதனையாகத்தான் பொதுமக்கள் இதைப்பார்க்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சிகாலம் தமிழகத்திற்கு போதும் என தமிழக மக்கள் எதிர்வரும் காலங்களில் ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.