அதிமுகவிடம் இருந்து ரூ1,500 கோடி வாங்கியதாக சொல்வது பொய்....ஒரு பைசாகூட வாங்கவில்லை: விஜயகாந்த்
மாமண்டூர்: அதிமுகவிடம் இருந்து ரூ1,500 கோடி பணம் வாங்கியதாக சொல்வது பொய்... ஒரு பைசாகூட தாம் வாங்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாண்டூரில் மக்கள்நலக் கூட்டணி- தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:

ஜெயலலிதாவுக்கு எதிரி கருணாநிதி; கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதா; கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் எதிரி இந்த விஜயகாந்த்.
மு.க.ஸ்டாலினுக்கு எதிரி அவரும் அவரது எண்ணங்களும்தான்... தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொல்கிறார்கள்.
தற்போதைய ஆட்சியிலேயே டாஸ்மாக் மது கடைகளை மூடி இருக்க வேண்டியதுதானே? இதற்காக சசிபெருமாள் உயிரிழந்தாரே..
எனக்காக சிறை சென்ற குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருகிறேன்... மற்றவர்களிடம் கேட்கமாட்டேன். எனக்கும் திருப்பி அடிக்க தெரியும். ஆனால் மக்கள் கொடுத்த பதவியை மதித்தே அமைதியாக இருக்கிறேன்.
மாமண்டூர் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. ஆகையால் அவர்களுக்கு எதற்கு நன்றி சொல்ல வேண்டும்?
நல்லவர்களைக் கொண்ட எங்கள் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
10 நிமிடம் மட்டும் பேச்சு...
முன்னதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தேர்தல் பிரசாரக் கூட்டத்தைப் போல அல்லாமல் பொதுக்கூட்டம் போல வரலாறுகளை நிறைய பேசினார். இதனால் விஜயகாந்த் 9.35 மணியளவில்தான் பேசத் தொடங்கினார்.
ஆனால் அவர், நேரம் இல்லை..நேரம் இல்லை என்றே திரும்ப திரும்ப கூறியதுடன் 10 நிமிடத்திலேயே பேச்சை முடித்துக் கொண்டார். இரவு 10 மணிக்கு கூட்டங்களை முடிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய உத்தரவு
விஜயகாந்த் பேசுவதற்கு 15 நிமிடம் நேரம் இருந்த போதும் அவர் பேசாமல் உரையை முடித்துவிட்டார். அத்துடன் எந்த ஒரு விஷயத்தையும் கோர்வையாகவும் பேசமுடியாமல் ரொம்பவே விஜயகாந்த் திணறித்தான் போனார்.












Click it and Unblock the Notifications