எதிர்க்கட்சி தலைவர் என்றால் இவரை போல்தான் இருக்கவேண்டும்!
எதிர்க்கட்சித் தலைவர் என்றால் இவரை போல்தான் இருக்க வேண்டும் என்று சமூகத்தை பேச வைத்த தலைவர் விஜயகாந்த்.
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் என்றால் இவரை போல்தான் இருக்க வேண்டும் என்று சமூகத்தை பேச வைத்தவர் விஜயகாந்த்.
கேப்டன் என ரசிகர்களாலும் தொண்டர்களாலும் அன்போடு அழைக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 66வது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் கொண்டாடி வருகிறார். இதற்காக பட்டு வேட்டி சட்டையில் படுஜோராக உள்ளார் விஜயகாந்த்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு அண்மையில் நாடு திரும்பினார். இதனால் கேப்டனுக்கு என்ன ஆனதோ என தொண்டர்கள் கலங்கினர்.
அரசியல்
இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக விஜயகாந்த் தனது கட்சி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஜயகாந்த், திரைத்துறையில் வெற்றி நாயகனாக இருந்து அரசியலுக்கு வந்தவர்.
விஜயகாந்துடன் கூட்டணி
2006ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோற்க காரணமாக இருந்தவர், பாமகவின் ஓட்டு வங்கியை கலைத்தவர் விஜயகாந்த் என்றும் கூறப்படுவதுண்டு. 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது விஜயகாந்தை கடுமையாக விமர்சித்த ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவரானார் கேப்டன்
இதில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஜெயலலிதா. பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.
விளாசிய ஜெயலலிதா
பின்னர் அதிமுக - தேமுதிக கூட்டணியில் மெல்ல விரிசல் விழுந்தது. அவ்வப்போது சட்டசபையில் தேமுதிக உறுப்பினர்களை விளாசினார் ஜெயலலிதா.
வேட்டியை மடித்து நாக்கை துருத்தி
கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதாவும் விஜயக்காந்தும் நேருக்கு நேராக மோதினர். அதுவரை ஜெயலலிதாவை அப்படி யாரும் கேள்வி கேட்டிருக்க முடியாது. வேட்டியை மடித்து நாக்கை துருத்தி ஆளும்கட்சி உறுப்பினர்களை அஞ்சாமல் மிரட்டினார் விஜயகாந்த்.
திராணி இருந்தால்
பிப்ரவரி ஒன்றாம் தேதி சட்டசபையில் அதிமுக - தேமுதிக உறுப்பினர்களிடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். உங்களுக்கு திராணி இருந்தால், தனி வேட்பாளரை நிறுத்துங்கள்' என, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு சவால் விடுத்தார்.
மிரட்டிய விஜயகாந்த்
இதையடுத்து பேசிய விஜயகாந்த், "இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது சகஜம்' என்றதுடன், பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., "டிபாசிட்' பறிபோனது குறித்து குறிப்பிட்டுப் பேச, அ.தி.மு.க., அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க் களும் ஆவேசமாகி குரல் எழுப்பினர். இதற்கு, கையை நீட்டி மிரட்டும் பாணியில் விஜயகாந்த் பதிலடி கொடுக்க, அவரும், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களும் வெளியேற்றப்பட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் என்றால்...
மேலும் கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஜெயலலிதா மற்றும் அதிமுக ஆட்சியை விமர்சிப்பதை தொடர்ந்தார் விஜயகாந்த். இதனால் ஜெயலலிதாவால் பல அவதூறு வழக்குகளுக்கு ஆளானார். இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து தொடர்ந்து அவதூறு அடக்குமுறைக்கு எல்லாம் அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்தி துணிச்சலாக பேசி வந்தார் விஜயகாந்த். எதிர்க்கட்சித் தலைவர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என இந்த சமூகத்தை பேச வைத்த துணிவு மிக்க நடிக்க தெரியாத அரசியல் தலைவர் விஜயகாந்த் என்பதை மறுப்பதற்கில்லை.