பால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பாரா?.. விஜயகாந்த் கேள்வி
சென்னை: தமிழகத்தில் தற்போது எழுந்துள்ள பால் பிரச்சினைக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்நோக்கி பால் விவசாயிகள் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது..
அ.தி.மு.க. அரசு 2011-ல் ஆட்சிக்கு வந்த பிறகு பால் விலையை இரு மடங்காக உயர்த்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளது. அந்த உயர்த்தப்பட்ட விலையை கொடுத்து ஆவின் நிறுவனத்தில் வாங்கப்படும் பால், ஆவின் நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் கெட்டுப்போவதும், அதை வாங்கிய மக்கள் கீழே கொட்டுவதும் என்ற பரிதாபமான நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதை சீர்படுத்தி செம்மையாக்க வேண்டிய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவோ ஆட்சி நிர்வாகத்தை பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பாரா? என பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் பல திட்டங்களும், திறப்பு விழாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின் செயல்படுத்தப்பட்டன.
அது குறித்து கேட்டால் அ.தி.மு.க.வில் பலரும் ஜெயலலிதா வந்த பிறகு செயல்படுத்துவதிலே என்ன தவறு, அதற்காக மக்கள் சுமார் 10 மாதம் காத்திருப்பதால் என்ன ஆகி விட போகிறது என, மக்களை துச்சமாக நினைத்து வியாக்கியானம் பேசுகின்றனர்.
ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதற்காக, அதற்கு துளியும் சம்பந்தமே இல்லாத தமிழக மக்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?.
இவ்வாறு தனது அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.