வினுப்பிரியா தற்கொலை: குற்றவாளி சுரேஷ் சேலம் மத்திய சிறையில் அடைப்பு
சேலம்: வினுப்பிரியா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷை சங்ககிரி 2ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயமணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் சேலம் மத்திய சிறையில் சுரேஷை அடைத்தனர்.
சேலம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, மஞ்சுளா. இவர்களது மகள் வினுப்பிரியா. இவரது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் வெளியிட்டதால் மனமுடைந்த வினுப்பிரியா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோரின் இரண்டு நாள் போராட்டத்திற்குப் பின்னர் வினுப்பிரியாவின் தற்கொலை வழக்கில் விசாரணை சூடுபிடித்தது. பேஸ்புக்கில் ஆபாசமாக புகைப்படத்தை வெளியிட்ட விஷயத்தில் ஐ.பி. எண்ணில் கிடைத்த தகவல் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.
அவர் கல்பாரப்பட்டியைச் சேர்ந்த தறி தொழிலாளி சுரேஷ் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் வினுப்பிரியாவை, அவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாகவும், காதலை ஏற்க மறுத்ததால், பேஸ்புக்கில் வினுப்பிரியாவின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதையும் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், சுரேஷை கைது செய்து, அவரிடமிருந்து செல்போன், சிம் கார்டு, டேட்டாகார்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவரை சங்ககிரி 2ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயமணி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஃபேஸ்புக் கணக்கை முடக்கவும், ஆபாச படத்தை அளிக்கவும் செல்போன் லஞ்சம் கேட்ட சைபர் கிரைம் தலைமைக் காவலர் சுரேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.