சீட்டுக் கட்டு குடியிருப்புகள்.. காற்றில் பறக்க விடப்படும் விதிமுறைகள்.. மண்ணில் புதையும் உயிர்கள்!
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பெருநகரங்களிலும் சீட்டுக் கட்டுக்கள் போல உயர்ந்து வியாபித்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதில் தொடர்ந்து விதிமுறைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாத காரணத்தாலும், கட்டடங்கள் வலுவாக நிற்கும் வகையில் மண் இருக்கிறதா என்ற அடிப்படை பரிசோதனையைக் கூட நடத்தாமல் கட்டிக் குவிப்பதுமே இந்தத் தொடர் விபத்துக்களுக்குக் காரணம் என்கிறார்கள் பொறியாளர்கள்.
மேலும் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பெரும்பாலானவர்கள் காற்றில் பறக்க விடுவதாலும் இப்படிப்பட்ட விபத்துக்கள் நடக்க இன்னொரு காரணம்.

மண் பரிசோதனை.. நடப்பதே இல்லை
பெரும்பாலான கட்டுமானங்களில் மண் பரிசோதனை என்பது நடத்தப்படுவதே இல்லை. ஒரு சாதாரண வீடு கட்டுவதாக இருந்தால் கூட மண் பரிசோதனை அவசியம் என்கிறார்கள் பொறியாளர்கள். ஆனால் வீடாக இருந்தாலும் சரி, அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் சரி பெரும்பாலானவர்கள் இது பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

சகட்டுமேனிக்கு
மேலும் அளவுக்கு மீறி பல அடுக்குகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டுவதும் இப்போது புற்றீசல் போல அதிகரித்து விட்டது. இதற்குக் காரணம், மும்பை போல சென்னையிலும் பல அடுக்குமாடிகளைக் கட்டலாம் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி கொடுத்திருப்பதால்.

சிஎம்டிஏ விதிமுறை சொல்வது என்ன..
சிறப்பு கட்டிடங்கள் அதாவது 2 தளத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் அல்லது வணிக கட்டிடங்கள் அல்லது 4 குடியிருப்புகளுக்கும் கூடுதலான எண்ணிக்கை கொண்ட குடியிருப்பு கட்டிடம் அல்லது 300 சதுர மீட்டருக்கு கூடுதலான தளப்பரப்பு கொண்ட வணிக கட்டிடங்களை குறிப்பதாகும். மனையை ஒட்டியுள்ள பொதுச் சாலை அல்லது மனைக்கு வழி தரும் பாதை குறைந்தது 9 மீட்டராக இருக்க வேண்டும்.

தொகுப்பு வளர்ச்சி
தொகுப்பு வளர்ச்சி என்பது கட்டிடங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என்று வேறுபாடின்றி ஒரு குறிப்பிட்ட மனையில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான கட்டிடங்களில் அமைக்கப்படும் குடியிருப்பு அல்லது வணிகம் அல்லது அவை இரண்டும் கலந்து கட்டப்படும் வளர்ச்சியை குறிப்பதாகும். இதற்கான பொது சாலையின் அகலம் குறைந்தது 9 மீட்டராக இருக்க வேண்டும்.

பல மாடிக் கட்டடங்கள்
பல மாடி கட்டிடங்கள் என்பது 4 தளங்களுக்கு மேல் அல்லது 15 மீட்டர் உயரத்துக்கு அல்லது அதற்கு மேலாக உள்ள கட்டிடத்தை குறிப்பதாகும். இந்த கட்டிடங்கள் கட்ட 1200 சதுர மீட்டருக்கு குறையாத மனைப்பரப்பு இருக்க வேண்டும். இதற்கு பொது சாலையின் அகலம் குறைந்தது 18 மீட்டர் இருக்க வேண்டும்.

எங்கு அமைக்கலாம்
சில வரைமுறைக்குட்பட்டு தரைப்பரப்பு குறியீடு மற்றும் கட்டிடத்தின் உயரம் ஆகியவை குறித்த வரையறைக்குட்பட்டு 12 மீ அல்லது 15 மீட்டர் அகலம் உள்ள பொது சாலையை ஒட்டியுள்ள மனைகளில் பல மாடி கட்டிடங்கள் அனுமதிக்கப்படலாம்.

சாப்ட்வேர் நிறுவனமாக இருந்தால்
மென்பொருள், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றுக்காக கட்டப்படும் கட்டிடங்கள், 1500 சதுர மீட்டருக்கு குறையாத மனைப்பரப்பு கொண்டதாக இருக்க வேண்டும். மனையை ஒட்டியுள்ள சாலை 18 மீட்டர் ஆக இருந்தால் 60 மீட்டர் வரை உள்ள பலமாடி கட்டிடம் அனுமதிக்கப்படும். அந்த சாலை குறைந்தது 30.5 மீட்டர் அகலம் இருக்குமானால் 60 மீட்டருக்கும் கூடுதலான உயரம் உடைய கட்டிடங்கள் சிறப்பு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படும்.

சிறப்புக் கட்டடங்கள்
சிறப்பு கட்டிடங்கள், தொகுப்பு வளர்ச்சிகள், பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கான பொழுதுபோக்கு பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படும் நிலங்கள் 2500 சதுர மீட்டருக்கு மேல் இருந்தால், குறைந்தது 10 மீட்டர் நீளம் அளவுடன் கூடிய 10 சதவீத நிலப்பகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இப்படி ஒதுக்கப்படும் திறந்த வெளிப்பகுதி பொது சாலையை சார்ந்து இருக்க வேண்டும் என்று சொல்கிறது சிஎம்டிஏ விதிமுறை.

சகட்டு மேனிக்கு விதிமீறல்
ஆனால் பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இந்த விதிமுறைகள் சகட்டுமேனிக்கு மீறப்படுகின்றன. 4 மாடிகளுக்கு அனுமதி வாங்கி விட்டு 10 மாடிகளைக் கட்டுகிறார்கள். இது வீடு வாங்குவோருக்குத் தெரிவதில்லை. அதேபோல மண் பரிசோதனை சரியாக செய்யயப்படுவதில்லை.

சென்னை – கோவையில்
இப்படித்தான் சென்னை ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் முன்பு பெரும் தீவிபத்து ஏற்பட்டபோது அனுமதி பெறாமல் கூடுதல் தளங்கள் கட்டப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. கோவையிலும் இதேபோல ஒரு பெரிய கட்டடம் அனுமதி பெறாமல் பல தளங்களைக் கட்டி அதை இடித்து தள்ளிய கதையும் நடந்தது.

மக்கள் உஷாராக இருப்பது நல்லது
இதுபோன்ற பல மாடி அடுக்குடி மாடிக் குடியிருப்புகளை வாங்கும்போது மக்கள்தான் உஷாராக இருந்து முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா, எத்தனை தளங்களுக்கு அனுமதி வாங்கியுள்ளனர், மண் பரிசோதனை நடந்துள்ளதா, கட்டடம் கட்டப்படும் மண் களிமண் தரையா, என்ன மாதிரியான மண் தன்மை என்பது குறித்தெல்லாம் கேட்டறிந்து வாங்க முன்வர வேண்டும்.

யோசித்துப் பார்க்க வேண்டும்.
கட்டும்போது இடிந்தால் பரவாயில்லை, ஆனால் கட்டி முடித்து அத்தனை தளங்களிலும் குடி வந்து நூற்றுக்கணக்கானோர் வசிக்கும்போது இப்படிப்பட்ட விபத்து நடந்தால் என்னாகும்.. யோசித்துப் பார்க்க வேண்டும் அனைத்துத் தரப்பினரும்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications