தூத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னர்களை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க வசதி அறிமுகம்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்தில், கன்டெய்னர்களை இணையதளம் மூலம் கண்காணிக்கும் (டிராகிங்) திட்டம் (கோடக்ஸ்), சரியான எடையை உறுதிப்படுத்தும் திட்டமும் துவக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன் முறையாக செல்போன், இணையம் மூலம் கன்டெய்னர்களை கண்காணிக்க டிஜிட்டல் எக்சேஞ்ச் என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இது தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அறிவித்துள்ள டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி தூத்துக்குடி துறைமுகத்தில் டிஜிட்டல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக கன்டெய்னர் டிஜிட்டல் எக்ஸ்சேஞ்ச் என்ற செயலி தூத்துக்குடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கப்படும் கன்டெய்னர்கள், தூத்துக்குடியில் ஆங்காங்கே இருக்கும் கன்டெய்னர் குடோன்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு சுங்கத்துறை சோதனைக்குப் பின், சான்றுகள் அளிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
துறைமுகத்துக்கும், கன்டெய்னர் குடோன்களுக்கும் இடையே பெட்டகங்களை கொண்டு செல்லும் போது பல்வேறு தவறுகள் நடைபெறுகின்றன. மேலும், குறித்த நேரத்துக்கு வந்து சேராமல் காலதாமதம் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
இதைத் தவிர்க்கும் வகையில் துறைமுகத்துக்கும் - கிட்டங்கிகளுக் கும் இடையே பெட்டகங்களை கண்காணிக்க புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. `கன்டெய்னர் டிஜிட்டல் எக்சேஞ்ச்' (கோடெக்ஸ்) என்ற இந்த புதிய வசதி இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. தூத்துக்குடி சரக்கு பெட்டக கிட்டங்கிகள் சங்கம், தூத்துக்குடி சுங்கத்துறை புரோக்கர் சங்கம், தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளன.
இதன் மூலம் இணைய தளம் வழியாகவும், செல்போன் மூலமாகவும் கன்டெய்னர்களை கண்காணிக்கலாம். இந்த செல்பேசி செயலியை தங்கள் செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால் அதன் மூலமும் பெட்டகங்களை கண்காணிக்கலாம்.
சரக்கு பொட்டகங்கள முறையாகவும், பாதுகாப்பாகவும் விரைவாகவும் கப்பலில் ஏற்றி இறக்க இந்த செயலி உதவுகிறது. இதற்கான துவக்க விழா தூத்துக்குடியில் நடந்தது. சென்னை சுங்க இலாகா தலைமை ஆணையர் பிரணாப் குமார் தலைமை வகித்து புதிய செயலியை துவங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சுங்க இலாகாவிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த ஆண்டராய்டு செயலி காரணமாக மேலும் சுமார் 200 கோடி வருமானம் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறினார்.
பெட்டகங்களை கண்காணிக்க பல வசதிகள் நடைமுறையில் இருந்தாலும், டிஜிட்டல் முறையில் கண் காணிக்கும் வசதி தற்போது தான் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதியில் ரகசிய குறியீட்டு எண் (பார்கோடு) அடிப்படையில் கன்டெய்னர்கள் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.
இதேபோல் பெட்டகங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சரக்குகள் ஏற்றுவதை தடுக்கும் வகையில், `சோலாஸ் வி.ஜி.எம். என்ற நவீன வசதியும் இன்று முதல் தூத்துக்குடி துறைமுகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வசதியை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ச.ஆனந்த சந்திரபோஸ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி கப்பல் முகவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் முகவரி அடங்கிய கையெடை தூத்துக்குடி சுங்க இலாகா ஆணையர் ஜோனி வழங்கினார். கப்பல் முகவர்கள் சங்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் இந்த செயலி அறிமுக விழாவில் கலந்து கொண்டு பாராட்டு தெரிவத்தனர்.