மேட்டூர் அணைக்கு ஒரே நாளில் 1912 கன அடி நீர் வரத்து... காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்: மேட்டூர் அணைக்கு ஒரே நாளில் வினாடிக்கு 1912 கன அடி வீதம் நீர் வந்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் இரு அணைகளில் இருந்தும் 3,365 கன அடி நீர் நீரை கர்நாடக அரசு திறந்து விட்டது. இந்த நீரானது ஒரு வாரம் கழித்து நேற்று மேட்டூர் அணையை வந்தடைந்தது.
இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1000 கனஅடியாக நீர் வந்த நிலையில் மேலும் 912 கன அடி அதிகரித்து நேற்று ஒரே நாளில் வினாடிக்கு 1912 கனஅடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 20.48 அடியாக உள்ளது.
மேட்டூர் அணை நீரின் அளவு 4.24 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் நீர் திறந்துவிட்டப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.