விஜய்யை வளைத்து போட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை- தமிழிசை தடாலடி
நடிகர் விஜய்யை வளைத்து போட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுவது போல் நடிகர் விஜய்யை வளைத்து போட்டு அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவம், டிஜிட்டல் இந்தியா குறித்த கருத்துகள் இடம்பெ்ற்றுள்ளதால் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் தமிழிசை, எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரி வருகின்றனர்.
இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது. பாஜகவில் விஜய்யை இணைத்துக் கொள்ள அக்கட்சியினர் இவ்வாறு குடைச்சல்களை கொடுக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
வளைத்து போட முயற்சியா
இந்நிலையில் சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்குநிலவேம்பு குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் விஜய்யை வளைத்து போட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
படம் முடக்கம்
காங்கிரஸ் ஆட்சியிலும் அவசர நிலை குறித்த திரைப்படம் வந்தபோது முடக்கப்பட்டது. தவறான கருத்துகள் எந்த திரைப்படத்தில் வந்தாலும் அவற்றை நீக்க கோருவோம்.
விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டோம்
விஷால் குறித்து எச்.ராஜா டுவிட்டரில் கூறிய கருத்தை நான் பார்க்கவில்லை. நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது விமர்சனங்களைக் கண்டு அஞ்சபோவதில்லை.
காங்கிரஸுக்கு எச்சரிக்கை
கரூரில் நடைபெறும் பொதுக்குழுவில் ஆர்.கே. நகர் தேர்தல், அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்படும். ஜிஎஸ்டி குறித்து மக்களுக்கு தவறான தகவல் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் தமிழிசை.