டாஸ்மாக்கை மூடினால்தான் அடுத்த தலைமுறையை காப்பாற்ற முடியும்... நீதிபதிகள் காட்டம்
தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள, தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் அடுத்த 2 தலைமுறையைக் காப்பாற்ற முடியும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சென்னை: தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் அடுத்த இரண்டு தலைமுறையைக் காப்பாற்ற முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், திருமுல்லைவாயில் பகுதியில் பொதுமக்களுக்குப் பல்வேறு வகையில் பிரச்சனைகளை உருவாக்கும் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் " டாஸ்மாக் தொடர்பான போராட்டங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மக்கள் தன்னெழுச்சியாகவே டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுகிறார்கள்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு எவ்வளவு விற்பனை டார்கெட் வைத்துள்ளீர்கள்? சிறுவர்கள் மது அருந்துவது வீடியோவாக வலைதளங்களில் வருகிறது. அந்த அளவுக்கு டாஸ்மாக் விற்பனை நடக்கிறது. அது புகாராக வரும்வரை ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?
இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் அடுத்த 2 தலைமுறையினரை காப்பாற்ற முடியும்" என்று சரமாரி கேள்விகளை தமிழக அரசிடம் எழுப்பினர்.