தமிழக கூட்டணிக் கட்சிகளை பாஜக வெளியேற்றுமா?... எச். ராஜா விளக்கம்
வேலூர்: பாஜக அணியில் இடம் பெற்ற கட்சிகளை ஒருபோதும் நாங்கள் வெளியேற்றியதில்லை. தேர்தல் நேரத்தில் பாஜக கூட்டணி பற்றிய முடிவை அகில இந்திய தலைமை எடுக்கும் என்று தேசிய செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார் எச். ராஜா. இந்த நிலையில் வேலூரில் உள்ள விஐடி கல்வி நிறுவனத்தில் நடந்த மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று அவர் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அவரது பேட்டியிலிருந்து....
புதுப் பொலிவுடன் பாஜக
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மத்தியில் இருந்த பல தலைவர்கள், நிர்வாகிகள் அமைச்சர்களாக பொறுப்பேற்றதை அடுத்து மத்தியிலும், மாநில அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியக் குழுவை அதன் தலைவர் அமித்ஷா அமைத்துள்ளார்.
புதிய நம்பிக்கை
பாஜக இதுவரை வெற்றி பெற முடியாமல் இருந்த மேற்கு வங்கம், ஒரிசா, கேரளம், தமிழகம் ஆகியவற்றுக்கு நாம் பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழிசைக்கு வாழ்த்துகள்
தமிழகத்திற்கு மாநிலத் தலைவராக டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டமைப்பு வலுத்தப்படும்
தமிழகத்தில் வரும் சட்ட சபை தேர்தலில் பாஜக ஆட்சி அமைவதற்கு முயற்சி எடுக்கும் வகையில், அமைப்பு ரீதியாக வாக்குச் சாவடி வாரியாக உறுப்பினர்களை சேர்த்தல், பிரபல தலைவர்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்ளுதல், பேச்சாளர்களுக்கு பயிற்சி அளித்து பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுதல், கட்சியின் நிர்வாகிகளுக்கான பயிற்சி அளித்தல், வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்துதல் போன்ற கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வோம்
சென்ற தேர்தலில் பாஜக 7 தொகுதிகளில் முதலிடமும், 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இடங்களில் 2-ஆம் இடமும் பெற்றுள்ளது. இத்தொகுதிகளில் மாதம்தோறும் மக்கள் தொடர்பை பாஜக ஏற்படுத்திக் கொள்ளும். அடுத்து 2-ஆம் இடம் பெற்ற இடங்களில் கவனம் செலுத்தப்படும். இறுதியாக 3-ஆம் இடத்தை கட்சி பிடித்துள்ள தொகுதிகளில் கட்சியை பலப்படுத்தி, வெற்றிப் பாதைக்கு கொண்டுச் செல்லும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
நாங்களாக வெளியேற்ற மாட்டோம்
பாஜக அணியில் இடம் பெற்ற கட்சிகளை ஒருபோதும் நாங்கள் வெளியேற்றியதில்லை. தேர்தல் நேரத்தில் பாஜக கூட்டணி பற்றிய முடிவை அகில இந்திய தலைமை எடுக்கும் என்றார் அவர்.