வருகிறது ஹெலன் புயல்... நாளை ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையைக் கடக்கும்!
சென்னை: ஹெலன் புயலால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குப் போகக் கூடாது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இருப்பினும் நாகை மீனவர்கள் பலர் கடலுக்குள் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வங்கக் கடலில் அந்தமான் அருகே ஹெலன் புயல் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா அருகே காவாலி என்ற இடத்தில் நாளை கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புயலைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. கடல் கொந்தளிப்பதாக இருக்கும். எனவே, பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நாகையைச் சேர்ந்த மீனவர்கள் பலர் கடலுக்குள் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தநிலையில், புதுச்சேரி, கடலூர், பாம்பன், நாகை துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.