அடுத்தது என்ன?... சசிகலாவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டியது தான் பாக்கி!
இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு வந்துள்ள நிலையில் சசிகலாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது தான் அடுத்த வேலையாக இருக்கும் என்று தெரிகிறது.
Recommended Video
சென்னை: இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு சென்று விட்ட நிலையில் அடுத்தகட்டமாக சசிகலாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியின் பணியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதிமுகவின் கட்சி அலுவலகத்தில் கூடி இருந்த அத்தனை தொண்டர்களும், சசிகலாவையும், தினகரனையும் வாய்ச்சொல்லால் வசைபாடி தீர்த்து விட்டனர். நாராச வார்த்தைகளில் அவர்கள் செய்த அர்ச்சனைகள் காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு இருந்தது. என்ன தான் ஜெயலலிதா போல நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டாலும் சசிகலாவால் ஜெயலலிதாவாக முடியாது என்பது அவர்களின் ஒட்டு மொத்தக் குரல்.
அதிமுகவின் இரு அணிகளாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் ஒன்று கூடினர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கும் நியமிக்கப்பட்டது. அதே போல ஆட்சியில் நம்பர் 1 அதாவது முதல்வர் பழனிசாமி, நம்பர் 2 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்கிற ரீதியில் அதிமுகவின் கட்சியும், ஆட்சியும் 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
இரு அணிகள் சேர்ந்த கையோடு செப்டம்பர் மாதத்தில் அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி முக்கியமான 12 தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில் இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அதே பதவிகளில் தொடர்வார்கள் என்பவை பிரமானமானவை.
சசி நியமனம் மட்டும் ரத்து
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. அவரது நியமனங்கள் ஏதும் செல்லாது. இதே போன்று கட்சிக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் தினகரன் நியமிக்கும் நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீக்கப்படாத சசிகலா
இந்த தீர்மானங்களின் சாராம்சப்படி சசிகலாவின் நியமனம் மட்டுமே செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கட்சியில் இருந்து அவர் நீக்கப்படவில்லை. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி முழுவதும் தேர்தல் ஆணைய அறிவிப்புப்படி இவர்களின் கட்டப்பாட்டிற்குள் வந்துள்ளது.
சசிகலா குடும்பத்தினர் நீக்கம்?
சசிகலா குடும்பத்தினரை வசைபாடி வரும் ஆட்சியாளர்களும் கூட இனி தொண்டர்களைக் காரணம் காட்டி சசிகலா குடும்பத்தினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது அடுத்த அதிரடியாக இருக்கும் என்று தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய போது சசிகலா அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இந்நிலையில் லகான் இப்போது ஓ.பன்னீர்செல்வம் கைக்கு போயுள்ளது, எனவே அவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதே அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.