உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஜெயலலிதா கையெழுத்து இல்லாத மர்மம்?
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான 12 மணிநேரத்திற்குள்ளாகவே அதிமுக வேட்பாளர்பட்டியல் வெளியாகி எதிர்கட்சியினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. வேட்பாளர் பட்டியலில் உள்ள சில வேட்பாளர்கள் வார்டுகளுக்கு அறிமுகமே இல்லாதவர்கள் என்று சென்னை, கோவை, திண்டுக்கல் மாநகராட்சிகளில் போராட்டம் வெடித்துள்ளது. வேட்பாளர் பட்டியலில் ஜெயலலிதாவின் கையெழுத்தே இல்லாமல் வெளியான மர்மம் என்ன என்பது பற்றியே தற்போது அதிமுக வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்காக சில மாதங்களுக்கு முன்பு இருந்தே வேலையை தொடங்கிவிட்டது அதிமுக. தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்று எதிர்பார்த்தே போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் முதலில் விருப்ப மனு வாங்கியது அதிமுக தலைமை. அப்படி வாங்கிய விருப்ப மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்யும் வேலையைத் தொடங்கிவிட்டார்கள்.
மாவட்டச் செயலாளர்களிடம் ஒரு பட்டியல் கேட்டு வாங்கப்பட்டது. உளவுத் துறையிடம் ஒரு பட்டியல் வாங்கியிருக்கிறார்கள். இரண்டையும் வைத்து ஒரு பட்டியல் தயார் செய்யும் வேலையை உள்ளாட்சி கண்காணிப்புக் குழுவிடம் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. அமைச்சர் வேலுமணி தலைமையில் அந்த குழு கடந்த வாரமே வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை ஜெயலலிதாவிடம் கொடுத்திருக்கிறது. அதில், சில திருத்தங்களை ஜெயலலிதா சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக விருப்பமனு
உள்ளாட்சித் தேர்தலுக்கு, அதிமுகவில் விருப்பமனு கொடுக்கபட்டு 24 ம் தேதி சனிகிழமையுடன் முடிந்தது, தமிழக முதல்வர் ஜெயலலிதா 22 ம் தேதி அப்பல்லோ மருத்துவமனயில் சிகிச்சைக்கு சேர்ந்த மறு நாட்களான 23,24 தேதிகளில் விருப்பமனு சரியாக வழங்கப்படவில்லை. விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளவும் இல்லை. ஆக இரண்டே நாட்களில் மனுக்களை சரிபார்த்து வேட்பாளர்களை தெரிவு செய்ய நேரம் இல்லாத போது எப்படி திடீர் என வேட்பாளர் பட்டியலை வெளியிட முடிந்தது என்கிற கேள்வி அதிர்ச்சியாக விண்ணப்பத்தவர்களிடமும் தொண்டர்களிடமும் உள்ளது.
சம்பிரதாய மனு
அதிமுகவில் விருப்பமனு என்பது ஒரு சம்பிரதாயம்தான். கடந்த மாதமே மாவட்ட செயலாளர், அமைச்சர்கள் மூலமாக லிஸ்ட் வாங்கபட்டு, அதிலிருந்து இறுதிசெய்யபட்டு விட்டது. 15 தினங்களுக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டாராம்.
வேலுமணிக்கு உத்தரவு
ஞாயிறன்று இரவு அமைச்சர் வேலுமணியை மருத்துவமனைக்கு வரவழைத்து சசிகலா பேசிய பிறகு, உள்ளாட்சி கண்காணிப்புக் குழுவில் உள்ளவர்களை அவர் உடனடியாகத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். திங்கட்கிழமையன்று காலை, அந்த குழுவில் உள்ளவர்கள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த வேட்பாளர் பட்டியல் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப் பட்டிருக்கிறது.
|
வேட்பாளர் பட்டியல்
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியிடுவதற்குமுன்பு ஒருமுறை முதல்வரிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக அவைத்தலைவரான மதுசூதனன், நேற்று காலை 9 மணியளவில் மருத்துவமனைக்குப் போனார். சசிகலாதான் இன்று அவரைச் சந்தித்தார். அப்போது வேட்பாளர் பட்டியல் தொடர்பாகப் பேசியிருக்கிறார்கள். 'அக்காகிட்ட பேசிட்டுச் சொல்றேன்... வெய்ட் பண்ணுங்க...' என்று சொல்லிவிட்டு, சசிகலா உள்ளே போயிருக்கிறார். சற்றுநேரத்துக்குப் பிறகு திரும்பிவந்த சசிகலா, 'இன்றைக்கு 12 மணி வரைக்கும் நேரம் சரியாக இல்லை. அதனால 12 மணிக்குப் பிறகு பட்டியலை வெளியிடுங்க என்று கொடுத்திருக்கிறார். அவர் சொன்னபடியே, 12 மணிக்குப் பிறகு பட்டியல் வெளியிட்டார்கள்.
சைதை துரைசாமி
சென்னையைப் பொருத்தவரை, சிட்டிங் மேயர் சைதை துரைசாமியின் பெயர் முதலில் தயாரான பட்டியலில் இருந்ததாம். ஆனால் அவராகவே முன் வந்து தான் போட்டியிட விரும்பவில்லை என்று முன்பே கூறியிருக்கிறார். அதனால்தான் அவரது பெயர் இடம்பெறவில்லையாம். தற்போது சிட்டிங் மேயர்களாக இருப்பவர்கள் சிலரது பெயரை பட்டியலில் இருந்து நீக்கியதும் ஜெயலலிதாதான் என்கிறார்கள்.
கவுன்சிலராக ஆசையா?
அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா பெயரும் இருந்திருக்கிறது. எனவேதான் இவர்களுக்கு மேயர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரவியது. ஆனால் லிஸ்ட்டைப் பார்த்த ஜெயலலிதா, அவங்க ரெண்டு பேரும் கடந்த 5 வருடங்களாக அமைச்சராக இருந்தது போதாதா? கவுன்சிலராக ஆகணும்னு ஆசைப்படுறாங்களா? எல்லோருக்கும் வாய்ப்புக் கொடுக்கணும்!' என்று சொல்லி, அவர்களது பெயரையும் கடந்த வாரம் லிஸ்ட்டில் இருந்து நீக்கினாராம்.
5 பேரில் யாருக்கு லக்
சென்னை மாநாகராட்சியைப் பொருத்தவரை, முன்னாள் எம்.பி.பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கந்தன், குப்பன், வெங்கட்ராமன், பிரபாகர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐந்து பேரும் ஓரளவுக்கு தெரிந்த பிரபலங்கள். இந்த ஐந்துபேரில் ஒருவருக்கு மேயராகும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் அதிமுக வட்டாரத்தில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்
கையெழுத்து இல்லாத மர்மம்
வழக்கமாக ஜெயலலிதா வெளியிடும் அறிக்கையிலும் சரி, அறிவிப்புகளிலும் சரி... ஜெயலலிதா பொதுச் செயலாளர், அஇஅதிமுக என குறிப்பிடப்பட்டு அவரது கையெழுத்தும் இருக்கும். ஆனால் நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில் பெயர் மட்டுமே இருந்தது. ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. வழக்கமாக, போயஸ் தோட்ட வீட்டில் இருந்த படி இதுபோன்ற அதிரடிகளைச் செய்யும் ஜெயலலிதா, இந்த முறை அப்பல்லோவில் இருந்தபடியே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு எதிர்கட்சியினரை அதிர வைத்துவிட்டார். மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா வீட்டிற்கு திரும்பும் முன் இன்னும் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடப் போகிறாரோ?