மயிலாடுதுறை மழை.. வந்தாலும் பிரச்சினை.. வரலைனாலும் பிரச்சினை! தண்ணீரால் கண்ணீர் விடும் விவசாயிகள்!
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள நிலையில், கோடைக்காலங்களில் தண்ணீர் இன்றி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைவதும், மழைக் காலங்களில் வெள்ளம் காரணமாக பயிர்கள் மூழ்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.
Recommended Video
கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இக்கன மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
'
மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் நெல் பயிரிட்ட சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்ட நிலங்கள் மழையில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மழை வந்து மயிலாடுதுறை வாடுதே! இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை! மூழ்கிய பயிரால் விவசாயிகள் வேதனை!
மயிலாடுதுறை மழை
குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த 10, 11 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தொடர்ந்து ஐந்தாவது நாளாக சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் காணப்படுவதால் அவை தண்ணீர் ஓட்டத்தை தடுத்து தேக்க நிலையை ஏற்படுத்துகின்றன.
விவசாய நிலங்களில் தண்ணீர்
விவசாய நிலங்களில் இருந்து வடிகால் வாய்க்கால்கள் வழியே மகிமலையாறு காவிரி ஆறு வீரசோழன் ஆறு மஞ்சளாறு மண்ணியாறு தெற்குராஜனாறு, வெள்ளைப் பள்ளம் உப்பனாறு உள்ளிட்ட ஆறுகள் வழியே தண்ணீர் கடலுக்குள் சென்று வடிந்து வருகிறது. ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அடைத்துக் கொண்டிருப்பதால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் கரைகளைத் தாண்டி தண்ணீர் வழிந்து விவசாய நிலங்களுக்குள் பெருக்கெடுத்து அப்படியே தேங்கியுள்ளன.
சம்பா பயிர்கள்
வயல்வெளிகளில் மூன்று அடிகளுக்கு மேல் தண்ணீரில் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளன. காளியப்பனள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கமேடு என்ற இடத்தில் ஆகாய தாமரைகள் காரணமாக மகிமலை ஆற்றின் கரைகள் வழிந்து 1200 ஏக்கர் விவசாய நிலங்கள் ஐந்து நாட்களாக நீரில் மூழ்கியுள்ளன. இதில் இளம் சம்பா நாற்றுகள் தண்ணீரில் கரைந்து விட்டன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் வேதனை
கோடைக்காலங்களில் தண்ணீர் இன்றி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைவதும், மழைக் காலங்களில் வெள்ளம் காரணமாக பயிர்கள் மூழ்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது மேலும் மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபட்டும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும், குறிப்பாக ஆகாய தாமரை, வாய்க்கால் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகங்களின் கண்காணிப்பில் அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.