தாழ்த்தப்பட்டோருக்கான தனி தொகுதியில் போட்டியிடும் 'ஐயர்'!
கரூர்: புதிய தமிழகம் கட்சி சார்பில் தனித்தொகுதியான கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் வி.கே.ஐயர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டபோது பலரது புருவங்களும் உயர்ந்தன.
ஐயர் என்பது உயர் ஜாதி பெயராக கருதப்படும் நிலையில், தலித்துகளுக்கான தனி தொகுதியில் ஒரு ஐயர் எப்படி நிறுத்தப்பட்டுள்ளார் என்பதுதான் வியப்புக்கு காரணம்.
கரூர் மாவட்டத்திலுள்ள ஒரே தனித் தொகுதி கிருஷ்ணராயபுரம். இந்த தொகுதி திமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட உள்ளவர்தான், வி.கே.ஐயர்.
இதுகுறித்த விவரம் சுவாரசியமானது. இதுபற்றி வி.கே.ஐயரே கூறியுள்ளதை கேளுங்கள்: எனது தந்தை ஒரு கம்யூனிஸ்ட். வேண்டுமென்றேதான் எனக்கு ஐயர் என்ற பெயரை தேர்ந்தெடுத்து சூட்டினார்.
நான் பிறந்த கால கட்டத்தில் தலித்துகள் மீது கடுமையான அடக்குமுறை இருந்தது. இதை தட்டிக்கேட்கும் வகையில்தான், எனது தந்தை ஐயர் பெயரை தேர்ந்தெடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.
1939ம் ஆண்டு, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும், அப்போது கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார் ஜாதி மக்களோடு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் ஆலய பிரவேசம் செய்தவர் வைத்தியநாத ஐயர், என்பது குறிப்பிடத்தக்கது.
"தேவர்" அய்யர்!
இதேபோல சோ. அய்யர் என்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரி தமிழகத்தில் இருந்தார். இவர் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் இவரது பெயரால் இவரும் பலரின் கவனத்தை ஈர்த்தவர் என்பது நினைவிருக்கலாம்.