பெரம்பலூரில் பாரிவேந்தர்… தென்காசியில் கிருஷ்ணசாமி மகள்… துண்டு போட்டு காத்திருக்கும் தலைவர்கள்
விஜயகாந்தின் தேமுதிக பாஜக கூட்டணியில் இணையுமா? இல்லையா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் மதிமுக 10 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலும் பாரதீய ஜனதாவிடம் கொடுக்கப்பட்டுவிட்டது.
விருதுநகரில் வைகோ
விருதுநகர் தொகுதி கட்டாயம் வேண்டும் என்று மதிமுக தெரிவித்துள்ளது. காரணம் வைகோ அங்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
பா.ஜனதா கூட்டணியில் களம் இறங்குவதால் இந்த முறை நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று வைகோ நம்புகிறார். எனவேதான் கடந்த இரண்டு ஆண்டுகளாவே தொகுதியை கவனித்து வருகிறார்.
பெரம்பலூரில் பாரிவேந்தர்
பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்துள்ள இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூரில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தங்கள் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியை தரும்படி பாஜகவை அவர் வற்புறுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம் நீண்ட காலமாகவே அந்த தொகுதிக்கு பாரிவேந்தர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
திமுகவின் கோட்டை
2004 ஆண்டு பெரம்பலூர் தொகுதியில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பொது தொகுதியாக மாற்றப்பட்ட பின்னர் நடிகர் நெப்போலியன் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சரானார். இந்தமுறை தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் களம் இறங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவரை எதிர்த்து பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிடுவது உறுதி என்று ஐ.ஜே.கே. கட்சி பிரமுகர்கள் கூறிவருகின்றனர்.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
கடந்த தேர்தலில் அதிமுக அணியில் இருந்த புதிய தமிழகம் தற்போது தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ளது. தென்காசி தொகுதியை தர ஒப்புக் கொண்டதால் தான் அந்த கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தார் என்று கூறப்படுகிறது. கடந்த பல மாதங்களாகவே தென்காசி தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கான முன் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டார்.
மகளை களமிறக்குகிறார்
டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். அதைவிட அவர் விரும்பவில்லை. எனவே, தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அவரது மகள் சங்கீதாவை நிறுத்தலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காகவே தென்காசி தொகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறாராம். முறைப்படி திமுக கூட்டணி தொகுதி பங்கீடுகள் உறுதியானதும் மகளை தேர்தலில் நிறுத்தும் முடிவை அறிவிப்பார் கிருஷ்ணசாமி'' என்கின்றனர் தென்காசியில் உள்ள புதிய தமிழகம் கட்சிப் பொறுப்பாளர்கள்.
கிருஷ்ணசாமிக்கு வாக்கு வங்கி
துவக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த தென்காசி தொகுதி, 1998-ம் ஆண்டுக்குப் பின் காங்கிரஸிடமிருந்து கைநழுவிப் போனது. அதே சமயம் 1998-லிருந்து இங்கே தனித்துப் போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் 1 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்து வருகிறார் கிருஷ்ணசாமி.
திமுக உடன் ஒப்பந்தம்
இந்தமுறை வலுவான கூட்டணி பலத்துடன் களமிறங்க வேண்டும் என்பதற்காகவே திமுக-வுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. புதிய தமிழகம் கட்சியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு ஒரு உறுப்பினராவையாவது அனுப்பிவிடவேண்டும் என்ற டாக்டர் கிருஷ்ணசாமியின் கனவு பலிப்பது தொகுதி வாக்காளர்களின் கையில்தான் உள்ளது.