பாஜகவின் 8 வேட்பாளர்கள்... அனேகமாக இவர்களாகத்தான் இருக்குமாம்
சென்னை: தமிழகத்தில் பாஜக சார்பில் முக்கியத் தலைவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படவுள்ளவர்கள் குறித்த ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.
கலவையான கூட்டணியை அமைத்துள்ள பாஜக தான் அதிக இடங்களில், குறிப்பாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட முடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தேசிய கட்சியாக இருந்தபோதிலும், மாநிலக் கட்சியான தேமுதிகவுக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுத்துள்ளது. இன்னொரு மாநிலக் கட்சியான பாமகவுடன் சம அளவிலான அதாவது 8 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
எந்தெந்த தொகுதிகளில்
பாஜக வரும் லோக்சபா தேர்தலில் தென் சென்னை, தஞ்சாவூர், வேலூர், கோவை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
யார் யாருக்கு சீட்
கட்சியின் முன்னோடித் தலைவர்களை இந்தமுறை அதிக அளவில் நிறுத்தவுள்ளது பாஜக என்று கூறப்படுகிறது.
காங்கிரஸுக்கு பரவாயில்லை
தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்கள் போட்டியிட விரும்பாத, பயப்படும் நிலையில், பாஜக தனது முக்கியத் தலைவர்களை நிறுத்துவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இல.கணேசன்
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தென் சென்னை தொகுதியில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன்
மாநில பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு இவர் போட்டியிடுவது இது 7வது முறையாகும்.
சிவகங்கையில் எச்.ராஜா
மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.
கோவையில் வானதி
கோவையில் வானதி சீனிவாசன் நிறுத்தப்படவுள்ளாராம்.
ஸ்ரீபெரும்புதூரில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஸ்ரீபெரும்புதூரில் நிறுத்தப்படுகிறாராம்.
திருப்பூர்-தென்காசி- ராமநாதபுரம்
தென்காசியில் அய்யாவழி போதகர் சிவச்சந்திரன், ராமநாதபுரத்தில் கருப்பு முருகானந்தம், திருப்பூரில் ஜி.கே.செல்வக்குமார் போட்டியிடலாம் என்று தெரிகிறது.