ரஜினி பாஜகவுடன் கைகோர்த்தால் அது 'அரசியல் தற்கொலை'... ஏன் தெரியுமா?
இரண்டு தலைமுறைகளாக நீடித்து வந்த எதிர்பார்ப்பை 2017ல் நிறைவேற்றி இருக்கிறார் நடிகர் ரஜினி. தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லி இருக்கும் அவரின் அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
சென்னை : அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ள ரஜினி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது அரசியல் தற்கொலைக்குச் சமம் என்று மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
இரண்டு தலைமுறைகளாக ரஜினியிடம் கேட்கப்பட்டு வந்த ஒரே கேள்வி நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்பதே. அதற்க 2017ல் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரஜினி. ரஜினியின் நேற்றைய அறிவிப்பு அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதற்கு மட்டும் தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆனால் அவர் பாஜகவுடன் கைகோர்ப்பார் இல்லையா என்ற கேள்வி இன்னும் தொக்கி நின்று கொண்டு தான் இருக்கிறது. ரஜினி ஆன்மீகத்தின் மீதும், கடவுள் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பது உலகறிந்த விஷயமே. ஆன்மிகம், கடவுள் வழிபாட்டை தவிர்த்து ரஜினியை பார்க்க முடியாது.

ரஜினியும் ஆன்மிகமும்
தன்னுடைய அரசியல் அறிவிப்பின் போதும் கூட பகவத் கீதை வாசங்களை சுட்டிக் காட்டியே பேசினார். இதே போன்று ஆன்மிக அரசியல் என்ற புதிய அரசியல் வார்த்தையையும் ரஜினி பயன்படுத்தி இருந்தார். இதே போன்று ரஜினியின் மேடையின் பின்புறம் இருந்த பாபா முத்திரை, அவரே ரசிகர்கள் மத்தியில் காட்டிய இந்த முத்திரை கட்சிக் கொடியின் சின்னமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ரஜினியின் இந்த குறியீடுகள் அடுத்தகட்ட விவாதத்தை உருவாக்கியுள்ளன.

பாஜகவுடன் கைகோர்ப்பாரா ரஜினி?
ரஜினி தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்வாரா என்ற சந்தேகத்தையும் இந்த பேச்சுகள் எழுப்பியுள்ளன. ஏனெனில் ஏற்கனவே தமிழகத்தில் பாஜக கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை பிடிக்க நினைப்பதாக பரவலான குற்றச்சாட்டுகளும், அதற்கான சான்றுகளும் இருக்கின்றன. இதற்கு ஏற்றாற் போல தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் ரஜினியின் தற்போதைய அரசியல் அறிவிப்பின் அம்சங்கள் அனைத்துமே பாஜகவின் கொள்கைகளுக்கு பொருத்தமானவை. எனவே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி பாஜகவுடன் தான் கைகோர்ப்பார் என்று உறுதியாகச் சொல்லி இருக்கிறார்.

அரசியல் தற்கொலை போன்றது
ரஜினி பாஜகவுடன் கைகோர்க்க எந்த முயற்சி எடுத்தாலும் தற்போதைய சூழலில் அது தற்கொலை செய்வதற்கு சமமான ஒரு முடிவாகவே இருக்கும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாஜகவிற்கு தமிழகத்தில் இருக்கும் எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் ரஜினியின் அரசியல் அறிவிப்பு பேச்சை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள். எனவே அது ரஜினிகாந்திற்கு பாதகமாகவே அமையும் என்பது அவரின் கருத்து.

தனிக்கட்சி தான்
இதே போன்று ரஜினி தன்னுடைய அரசியல் கட்சியை பொங்கல் பண்டிகையின் போது அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அதுவரை மற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து ஒதுங்கி நிற்கவே ரஜினி விரும்புவதாகவே இதனை பார்க்க வேண்டும். அதே போன்று 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று ரஜினி அறிவித்துள்ளதை பார்க்கும் போது, வேறு கட்சிகளுடன் கூட்டணியோ அல்லது மற்ற கட்சிகளுக்கோ ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டில் ரஜினி உறுதியாக இருப்பது தெரிகிறது என்றே அரசியல் விமர்சகர் தெரிவிக்கிறார்.

கூட்டணி வைத்தால் பின்னடைவு தான்
ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவர் பாஜகவின் முகமாக பார்க்கப்படுவதாலேயே அவ்வாறு கூறுகின்றனர். எனினும் அவர் தனது அரசியல் கட்சியை எப்படி உருவாக்குகிறார், அதன் கொள்கைகள் என்ன? என்பதை பார்த்து தான் அடுத்த கட்டமாக ரஜினியின் அரசியல் பயணம் எவ்வாறு அமையும் என்பதை சொல்ல முடியும். ரஜினி பாஜகவுடன் கைகோர்த்தாலோ, மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தாலோ அது அவருக்கும் பின்னடைவை தான் ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி என்று கூறுகிறார் மூத்த அரசியல் விமர்சகர்.












Click it and Unblock the Notifications