அவசரமாக கொடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்ட ரெட் அலெர்ட்.. என்ன காரணம்.. உள்நோக்கம் இருக்கிறதா?
தமிழகத்தில் மழை பெரிய அளவில் பெய்யாத போது, ஏன் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மழை பெரிய அளவில் பெய்யாத போது, ஏன் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழை பெய்தது.
இன்று காலையில் இருந்து சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு கொடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது
முதலில் நான்கு நாட்களுக்கு முன்பே மழை பெய்ய தொடங்கியவுடன் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்றும் நாளையும் தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஏற்பாடுகள் தீவிரம்
இதை அடுத்து தமிழகம் முழுக்க பேரிடர் மீட்பு படையினர் அனுப்பப்பட்டனர். அதேபோல் மீட்பு முகாம்களும் அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 650க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.
வெதர்மேன் என்ன சொன்னார்?
ஆனால் தமிழ்நாடு வெதர்மேன், இதனால் பெரிய பிரச்சனை ஏற்படாது என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது இந்த ரெட் அலெர்ட் தேவையில்லாமல் கொடுக்கப்பட்ட ஒன்று. இது பீதியை ஏற்படுத்துகிறது. இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் 7ம் தேதிக்கு பிறகு நீங்களே இதை புரிந்து கொள்வீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
பெரிய பாதிப்பு இல்லை
தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது போலவே பெரிய மழை பெய்யவில்லை. அதிகபட்சம் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் வகையில் இரண்டு நாள் மட்டுமே மழை பெய்தது. ரெட் அலெர்ட் கொடுக்க வேண்டிய அளவிற்கு மழை பெய்யவில்லை. கனமழை பெய்யும் என்று இன்று நாள் குறிக்கப்பட்ட நிலையில், இன்றுதான் சென்னையில் பல இடங்களை வெயில் அடிக்கிறது.
வாபஸ் வாங்கப்பட்டது
இதை தொடர்ந்து நேற்று மாலை ரெட் அலெர்ட் திரும்ப பெறப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறி ரெட் அலெர்ட் திரும்ப பெறப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி மாற்றி மாற்றி மக்களை குழப்புவது ஏன் என்று மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
எதாவது உள்நோக்கம் இருக்கிறதா?
இந்த நிலையில், சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஏன் மக்களை இப்படி பீதிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணமே இல்லாமல், நான்கு நிறங்கள் இருக்கும் போது நேரடியாக ஏன் ரெட் அலெர்ட் கொடுக்க வேண்டும். கேரளாவில் வெள்ளம் வந்த போது கூட ஆரஞ்ச், ரெட் என்றுதான் படிப்படியாக எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழகத்தில் இப்படி நேரடியாக ரெட் அலெர்ட் கொடுத்தது ஏன், மக்களிடம் பீதியை உருவாக்க ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் தள்ளிப்போனது
தற்போது இந்த ரெட் அலெர்ட் பீதி காரணமாக தேர்தல் தள்ளிப்போனதுதான் மிச்சம். தமிழகத்தில் நடக்க வேண்டிய திருவாருர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் இந்த மழை எச்சரிக்கை காரணமாக தள்ளி போய் இருக்கிறது. அதோடு தேர்தல் ஆணையம் டிசம்பரில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. டிசம்பரில் வெள்ளம் வரும் என்று தேர்தல் ஆணையத்திற்கு யார் தகவல் சொன்னது என்று விவரம் வெளியாகவில்லை. இப்படி வராத மழையையும், வராத வெள்ளத்தையும் மனதில் வைத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பது மக்களிடையே பல்வேறு குழப்பமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.