நிர்பயா வழக்கில் 17 வயது சிறுவனுக்கு கிடைத்த சிறைவாசம் கூட தஷ்வந்துக்கு கிடைக்கலையே.. மக்கள் விரக்தி
நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் 17 வயது சிறுவனுக்கு கிடைத்த சிறைவாசம் கூட ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு கிடைக்காததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை: ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளிக்கு எதிரான தேவையான ஆதாரங்களை போலீஸார் சமர்பிக்காததால்தான் கொலையாளி தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்தாகியுள்ளது, அவனுக்கு ஜாமினும் கிடைத்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிக கொடூரமாக பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டார்.
சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
குற்றவாளிகள் கைது
இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா (உடற்பயிற்சியாளர்), பவன்குப்தா (பழ விற்பனையாளர்), அக்சய் குமார் சிங் தாகூர் (பேருந்து கிளீனர் ), 17 வயது சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திகார் சிறையில் தற்கொலை
நிர்பயாவிடம் மிக கொடூரமாக நடந்து கொண்ட ராம் சிங் திகார் சிறையில் மார்ச் 2013-இல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து இளம் குற்றவாளியான 17 வயது சிறுவனுக்கு ஆகஸ்ட் 2013-இல் தண்டனை கிடைத்தது.
3 ஆண்டுகள் தண்டனை
பாலியல் பலாத்காரத்தின் போது மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட 17 வயது சிறுவனுக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் முடிவடைந்து அவர் கடந்த 2015 டிசம்பர் 20-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இது மக்களை அதிர வைத்தது.
சபாஷ் டெல்லி போலீஸ்
குற்றவாளி சிறுவனாக இருந்தபோதிலும் அவனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டியதில் டெல்லி போலீஸார் திறம்பட செயல்பட்டனர். இதனால் அந்த சிறுவனுக்கு 3 ஆண்டுகளாவது தண்டனை கிடைத்தது. அந்த தண்டனை காலத்தின் போது அவனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
ஹாசினி கொலை
சென்னை முகலிவாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாபு-ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). அவர் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி பக்கத்து வீட்டில் உள்ள தஷ்வந்த் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டபோது சிறுமி சப்தமிட்டதால் அவரை தஷ்வந்த் கொலை செய்தார். பின்னர் மதுரவாயல் சாலையில் சிறுமியின் உடலை எரித்தார்.
போலீஸ் கைது
தஷ்வந்த்தை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் தஷ்வந்துக்கு எதிராக போலீஸார் முறையான ஆதாரங்கள் தாக்கல் செய்யாததால் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த இளைஞர் இன்று ஜாமீனில் வெளியே வந்தார்.
கடும் எதிர்ப்பு
நிர்பயா வழக்கில் தொடர்புடைய சிறுவனுக்கு 3 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் அளவுக்கு டெல்லி போலீஸார் சிறப்பாக செயல்பட்டனர். அப்பாவி பெண் மீது பாலியல் ரீதியாக கொடுமை நடத்த தெரிந்த சிறுவனுக்கு தயவு தாட்சண்யம் காட்டாமல் 18 வயது வரும் வரை காத்திருக்கவைத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஸ்காட்லாண்ட் யார்டு
தமிழக போலீஸார் ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸாருக்கு இணையானவர்கள் என்று புகழ்ந்து வரும் நிலையில் ஒரு குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பும் வகையில் ஆதாரங்களை திரட்டாததில் காவல் துறை மெத்தனம் காட்டியது ஏன். 1000 கனவுகளுடன் பட்டாம்பூச்சி போல் உலாவந்த சிறுமியை திருப்பி தர முடியுமா என்று பொதுமக்கள் பொங்குகின்றனர். தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என்பதை அமல்படுத்துவது எப்போது?