ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம்.. ரசிகர்களே இதைத்தான் நினைக்கிறார்கள்.. பின்னணியில் வலுவான காரணம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளதற்கான சமிக்ஞைகளை கொடுத்து வரும் நிலையில், இதுவரையில் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என கருதி காத்திருந்தவர்களும் அதை சீரியசாக எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என பேசத் தொடங்கிவிட்டனர்.
ரஜினியை தலைவா என அழைக்கும் ஆர்.ஜே.பாலாஜி கூட இதில் விதிவிலக்கு இல்லை. ஏன் இந்த விரக்தி ரஜினி மீது ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் ஏற்பட்டது என்ற காரணத்தை அறிந்தால்தான் ரஜினி தனது சுயத்தை பரிசோதனை செய்துகொண்டு அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.
பொதுவாக ரஜினி அரசியல் பேச்சுக்கள் இரு வகையில் பார்க்கப்படுகின்றன. ஒன்று, இது திரைப்பட ரிசீலுக்கு முந்தைய வழக்கமான ஸ்டன்ட். மற்றொரு பார்வை, இவர் அரசியலுக்கு வந்தால் என்ன சாதிக்க முடியும் என்பது.
இதில் ஏறத்தாழ இப்போதைய பெரும்பாலான வாத விவாதங்கள் என்பது ரஜினியால் அரசியலில் சாதிக்க முடியுமா என்ற ஆரோக்கிய தளத்தில்தான் நடந்து வருகிறது.
ரசிகர் குரல்
சார்.நான் உங்கள் அதிதீவிர வாசகன்.அதிதீவிர ரஜினி ரசிகனா இருந்து ஓய்வு பெற்றவன்...ஒரு தேர்தல்ல தி.மு.க.ஒரு தேர்தல்ல ஆறு தொகுதி.பா.ம.க.எதிர்ப்பு...இன்னும் நிறைய வேதனைகளை சந்தித்து நிறைய புத்தகங்களை படித்து தான் இந்த வியாபாரிகளிடமிருந்து விலகியிருக்கிறேன்..எத்தனை பணம்.நேரம் .இளமை.நாங்கள் தொலைத்து விட்டோம்.உணர்ந்து வருந்தும் போது ஐம்பதைத் தொட்டாகி விட்டது சார்...யார் வேண்டுமானாலும் வரலாம்.இது ஜனநாயக நாடு..யாரும் எதுவும் சொல்லலாம் ..செய்யலாம்..இது உண்மை..ஆனால் நொறுங்க சம்பாதித்து விட்டு தான் வருவேன் என்று முதல்லயே சொல்லிருந்தா என்ன தப்பு...." என்று குமுறியுள்ளார் பேஸ்புக்கில் ஒரு தீவிர ரஜினி ரசிகர்.
ஏன் இப்போது?
இதுதான் பல ரசிகர்கள் மனதில் உள்ள அடிநாத குமுறலாக உள்ளது. அரசியலுக்கு வர வேண்டியவர் வயது இருக்கும்போதே வந்திருக்க வேண்டியதுதானே, இப்போது ஏன் வர நினைக்கிறார் என்கிறார்கள். அப்படியே வர நினைத்தாலும், அதற்கான அடித்தளமாக அவர் செய்தது என்ன என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள்.
வரிசையாக படங்களின் தோல்வி
ரஜினிகாந்த் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருந்தார். அவர் நடித்தாலே படம் மெகா ஹிட் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பாபா வரைதான் அந்த நிலை. பாபா தோல்விக்கு பிறகு ரஜினியும், நடிகர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறாரே தவிர மாயாஜால மந்திரக்காரராக கிடையாது. குசேலன், கோச்சடையான், லிங்கா
போன்ற படங்களின் தோல்வி அவருக்கே அந்த புரிதலை கொடுத்துவிட்டது. கபாலி திரைப்படம் ரசிகர்களையும், வெகுஜனங்களையும் ஏமாற்றினாலும், அது பேசிய தலித் அரசியல் படத்திற்கு வேறு ஒரு தளத்தில் மதிப்பை பெற்றுக்கொடுத்தது.
ரஜினியே ஏற்றுக்கொண்டார்
யதார்த்த சினிமாவின் ஆரோக்கிய பிடியில் சிக்கியுள்ள தமிழ் சினிமா உலகில் தனது மார்கெட் நிலவரத்தை அறிந்து வைத்துள்ளார் ரஜினி. அவரே இதை ஒப்புக்கொண்டு தனது வாயாலே தெரிவித்துள்ளார். "சினிமா நல்லா இருந்தாதான் ஓடும். படம் நல்லாயில்லன்னா எவ்வளவுதான் குட்டிகரணம் அடித்தாலும் ஓடாது" என்று ரசிகர் சந்திப்பில் வாய் திறந்தார் ரஜினி. எனவே மார்க்கெட் நிலவரம் சரிந்த பிறகு அடுத்த சாய்சாக அரசியலை ரஜினி தேர்ந்தெடுத்துள்ளாரே என்பது அவரது தீவிர ரசிகர்களுக்கும் இருக்கும் ஆதங்கம்.
திடீர் அரசியல்வாதி
கமல் போல அவ்வப்போது அரசியல் கருத்துக்களை கூறிவந்திருந்தால் கூட கிரேஸ் மார்க் போட்டு பாஸ் செய்து விடுவார்கள் ரசிகர்கள். ஆனால், ரஜினியோ, ஈழ இனப்படுகொலையின்போதோ, முல்லை பெரியாறு விவகாரத்திலோ, ஆந்திரத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதோ, சென்னை வெள்ளத்தை அரசு கையாண்ட விதம் பற்றியோ, மாட்டுக்கறி சர்ச்சை பற்றியோ வாய் திறக்காதவர். மக்கள் ஏடிஎம்களில் கால் கடுக்க காத்திருக்க வைக்கப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பின்போது புது இந்தியா பிறந்துவிட்டது என ஆட்சியாளர்களுக்கு ஆமாம் சாமி போட்டவர் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.
சாதிக்கட்டுமே
மக்களுக்கு சிறு அளவில் உதவிகள் செய்வது காதும் காதும் வைத்தாற்போல பல நடிகர்கள் செய்வதுதான். அதை ஒரு தகுதியாக வைத்து முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது சரியில்லை. ரஜினி களமிறங்கட்டும், சாதிக்கட்டும், பிறகு ஆசைப்படட்டும் என்பதே பொதுமக்களின் பார்வையாக உள்ளது.