தமிழகத்தில் சாரல் மழை மறைந்து வெயில் வெளுக்கிறதே ஏன் தெரியுமா?
சென்னை: தென்மேற்கு பருவமழை வடக்கு நோக்கி நகர்ந்துவிட்டதால்தான் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துவிட்டதாக வானிலை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சென்னை, மதுரை, திருச்சி, நாகப்பட்டினம் நகரங்களில், 38 முதல் 40 டிகிரி செல்சியசை ஒட்டி வெப்ப நிலை பதிவாகி வருகிறது. சாரல் மழை பெய்து வந்த நிலையில் திடீரென வெப்பம் அதிகரிக்க காரணம்,
கேரளாவில், ஜூன் முதல் வாரத்தில் உருவான தென் மேற்கு பருவ மழை, வட திசையை நோக்கி நகர்ந்துவிட்டதுதான் காரணம் என்று வானிலை இலாகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பருவமழை உருவாகும் தொடக்கத்தில், அந்த தாக்கத்தால், தமிழகத்தின், ஒரு சில இடங்களில் பெய்யும் மழையால், வெப்பம் சற்று தணியும். வட திசை நோக்கி பருவ மழை நகர்ந்ததும், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இதுதான் வழக்கம் என்பதால் இப்போதும் அதுதான் நடந்துள்ளது. வடக்கு நோக்கி நகரும் பருவமழையால் கேரளாவின் வட பகுதி, கர்நாடகா, மகாராஷ்டிரா நல்ல மழை பெறும். தமிழகத்தில் ஜூன் இறுதிவரை வெப்பம் நீடிக்கும்.
ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய சராசரி மழை தற்போது பெய்து விட்டது. இப்பருவத்தில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தான் தமிழகத்துக்கு ஓரளவு மழை கிடைக்கும்.
சென்னை, நாகை போன்ற கடலோர பகுதிகளில், கடல் காற்று தரையை நோக்கி வீசுவது குறைவாக உள்ளது. அதனாலும், வெப்பம் அதிகரித்து வருகிறது.