எம்.ஜி.ஆர். ஏன் இப்படிச் செய்தார்?.. ஆக்கரமிப்பை அகற்ற முடியாத அவலம்!
சென்னை: எம்.ஜி.ஆர். எங்களுக்குக் கொடுத்த நிலம் இது. இங்கிருந்து நாங்கள் போக முடியாது என்று ஆற்றங்கரையோரமாக வசிக்கும் மக்கள் கூறி போராட்டத்தில் குதித்ததால் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்க வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் திரும்பிப் போக நேரிட்டது.
சென்னையை கடந்த நவம்பர் - டிசம்பரில் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கி மாநகரமே சிதைந்து போனது. பலர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுத் தப்பியுள்ளனர். பலருக்கு வீடுகள், பொருட்கள் என பலதும் போய் விட்டது.
இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி பெரும் பாதிப்பைச் சந்தித்தவர்கள் கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரமாக வசித்து வந்தவர்கள், ஏரி, கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களும், அவர்களால் மற்றவர்களும்தான்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களை பாரபட்சமின்றி அகற்றுமாறு கோர்ட் உத்தரவே உள்ளது. ஆனாலும் அதைச் செய்வதில் பல சிக்கல்கள். குறிப்பாக அரசியல் கட்சிகளின் அரவணைப்பில் இவற்றில் பெரும்பாலான பகுதிகள் உள்ளன.
சக்தி இல்லாமல் திணறும் அதிகாரிகள்
இப்படி அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் என சக்தி வாய்ந்த பாதுகாப்பின் கீழ் பல ஆக்கிரமிப்புப் பகுதிகள் உள்ளதால் அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
ஆற்றங்கரையோரமாக இடம் ஒதுக்கிய எம்ஜிஆர்
இந்த நிலையில் நந்தம்பாக்கம் பகுதியில், அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரே குறுக்கே வந்து நிற்பதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.
நந்தம்பாக்கம் பர்மா காலனி
நந்தம்பாக்கம் பகுதியில் பர்மா காலனி பகுதி உள்ளது. இது அடையாறு ஆற்றங்கரைக்கு மேலேயே உள்ளது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன.
வீடுகளை அகற்ற முடிவு
இந்த வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து உதவி செயற் பொறியாளர் தியாகராஜன் என்பவரது தலைமையில் அதிகாரிகள் கணக்கெடுக்கு வந்தனர்.
முற்றுகை - மோதல்
ஆனால் பொதுமக்கள் திரண்டு வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீடுகளை அகற்றக் கூடாது என்று கோஷமிட்டுப் போராட்டத்தில் குதித்தனர்.
எம்.ஜி.ஆர். கொடுத்த இடம்
இதுகுறித்து அந்தப் பகுதி நலச் சங்கத் தலைவரான மனோகரன் என்பவர் கூறுகையில், இது ஆக்கிரமிப்பு இடம் அல்ல. மறைந்த எம்.ஜி.ஆர். எங்களுக்காக ஒதுக்கிய இடம் இது. குடிசை மாற்று வாரியம் மூலமாக வழங்கினார்.
3 கிலோமீட்டருக்குள் இடம் கொடுங்க
இந்த இடத்தை விட்டு போகச் சொன்னால் நாங்கள் போக முடியாது. முடிந்தால் 3 கிலோமீட்டருக்குள் வீடு கொடுங்க. நாங்கள் போகத் தயார். அதுவரை யாரும் போக மாட்டோம் என்று கூறினார்.
தள்ளிக் கொடுத்திருக்கலாமே தலைவரே!
ஒரு வேளை இந்த இடத்தை எம்.ஜி.ஆர். ஒதுக்கியது உண்மை என்றால் சற்றுத் தள்ளி இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம்.. என்ன செய்வது, சென்னை வெள்ளத்தில் சிக்கி ஆற்றங்கரையோரமாக உள்ள எம்.ஜி.ஆர். வீடும்தான் பாதிப்புக்குள்ளானது!