கருணாநிதியை மோடி திடீரென சந்திக்க காரணம் என்ன?
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி நேற்று திடீரென சந்தித்து நலம் விசாரித்தது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முரசலி பவளவிழாவை சமீபத்தில் திமுக பெரும் பிரமாண்டமாக நடத்தியது. ஆனால் பாஜக தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், திமுக தலைவரை மோடி நேரில் சந்தித்தது திமுகவினருக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது.
மோடியால் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால்தான் வெளிநாட்டில் இருந்த மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்னை திரும்பி வந்தார்.
மோடியின் நோக்கம்
மோடி இவ்வாறு திடீரென கருணாநிதியுடன் சந்திப்பு நடத்த காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு வகையான யூகங்கள் உலவுகின்றன. அதில் ஒன்று, தமிழக மக்களிடம் குறிப்பாக தன்னை எதிர்த்து அரசியல் செய்யும் திமுகவினர் மத்தியில் நற்பெயரை ஈட்டுவது மோடியின் முதல் நோக்கம் என்கிறார்கள்.
ஒரே தாக்குதல்
அதிமுக, திமுக என, தமிழகத்தில் பாஜக இரு முனை தாக்குதலுக்கு உள்ளாகி வந்தது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பாஜகவின் தோழமை கட்சி போல செயல்பட ஆரம்பித்துள்ளது. டிடிவி தினகரன் அணி கூட பாஜகவுக்கு எதிராக அடக்கியே வாசிக்கிறது. ஆனால் திமுக மட்டுமே பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.
தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு
திமுக அனுதாபிகள்தான் சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கும், மோடிக்கும் எதிராக மீம்ஸ், விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். மேலும், மோடி தமிழக நலன்களுக்கு எதிரானவர் என்ற பிரச்சாரத்தை தலைமையை போலவே தொண்டர்களும், சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக மேற்கொண்டு வருகிறார்கள். அதன்நீட்சிதான், மெர்சல் போன்ற திரைப்படங்களில் இடம் பெறும் வசனங்கள் என்று பாஜக நினைக்கிறது.
திமுக மென்மை
இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை மோடி சந்தித்துள்ளதன் மூலம், பாஜகவுக்கு எதிரான கோப அலை குறையும் என மோடி நினைப்பதாக கூறப்படுகிறது. தன்னை விமர்சனம் செய்யும் கட்சி தலைவரை நேரடியாக சென்று சந்தித்து நலம் விசாரித்தன் மூலம், தமிழக தலைவர்களையும், தமிழக கலாசாரத்தையும் மோடி மதிப்பதை போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. இதையே அவரும் விரும்பியதாக கூறப்படுகிறது. திமுகவினர் பலரும் சமூக வலைத்தளங்களில் மோடியின் கோபலபுரம் இல்ல வருகையை சிலாகித்து சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதே இதற்கு சாட்சி.