கொச்சி மெட்ரோ விழாவுக்கு வரும் மோடிக்கு.. சென்னை மெட்ரோவுக்கு வர வழி தெரியாதது ஏனோ!
கொச்சியில் உள்ள மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு வரமுடிந்த பிரதமர் மோடியால் தமிழகத்தில் நடைபெற்ற திறப்பு விழாவுக்கு வர முடியாதது ஏனோ?.
சென்னை: சென்னையில் நடந்த மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு வருகை தராத பிரதமர் நரேந்திர மோடி, கொச்சி மெட்ரோ ரயில் திறப்பு விழாவுக்கு மட்டும் சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு மத்திய அரசு அதிமுகவின் இரு அணிகளையும் கைக்குள் போட்டு கொண்டு ஆட்டிப்படைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் தமிழகம் தொடர்பான எதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருவதில்லை என்ற புகாரும் உள்ளது.
மீனவர் பிரச்சினை
தமிழக எல்லையில் மீன் பிடிக்கும் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இலங்கைக்கு இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து வருகிறது. வெளிநாடுகளில் வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரத்தக் கண்ணீர் வடிக்கும் மத்திய அரசு இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டால் மட்டும் கண்டு கொள்வதே கிடையாது என்ற ஆதங்கம் உள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர் பாதிக்கும் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.
விவசாயிகள் போராட்டம்
வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 41 நாள்களாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் பிரதமர் அலுவலகம் அருகே நிர்வாண போராட்டத்தையும் நடத்தினர். எனினும் பிரதமர் விவசாயிகளை சந்திக்கவே இல்லை, அவர்களது கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை.
மாட்டிறைச்சிக்கு தடை
இந்நிலையில் இறைச்சிகாக மாடு, கன்று, எருது, ஒட்டகம் ஆகியவற்றை விற்பனை செய்ய மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அதேபோல் மாட்டிறைச்சிக்கும் தடை விதித்துள்ளது. இதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இதேபோல் நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு கோரியும் விலக்கு அளிக்கவில்லை.
பாஜகவின் பிடியில்...
தமிழக அரசு மீதமுள்ள 4 ஆண்டுகளையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றால் அதற்கு பாஜகவின் தயவு அவசியமாகிவிட்டது. பாஜகவுக்கு இணக்கமாக இல்லை எனில் தங்கள் மீது சிபிஐ ரெய்டு பாயும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால் பாஜக அரசு கொண்டு வரும் திட்டங்கள் தமிழகத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்த போதிலும் அதை கண்டும் காணாமல் உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்
சென்னையில் மெட்ரோ ரயிலின் இன்னொரு புதிய சேவை கடந்த மாதம் தொடங்கியது. இதில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார். மேலும் விழா மேடையிலேயே தமிழக அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்கு சென்று கோப்புகளையும் பார்வையிட்டார். இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
கொச்சி மெட்ரோ ரயில்
இந்நிலையில் கொச்சியில் இன்று மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். சென்னை விழாவுக்கு வெங்கையாவை அனுப்பியது போல கொச்சிக்கும் அனுப்பாமல், மோடியே வந்து கலந்து கொண்டது, ஒரு கண்ணில் வெண்ணெயும், மறுகண்ணில் சுண்ணாம்பு என்பதைத்தான் நினைவூட்டுகிறது.
கேரளா அப்படி.. தமிழ்நாடு இப்படி
மாட்டிறைச்சி தடையில் கடும் கொந்தளிப்பில் உள்ளதாலும், திராவிட நாடு கோரிக்கை வலுத்தாலும், எந்த திட்டமாக இருந்தாலும் அது தவறு என்றால் மத்திய அரசை தைரியமாக கண்டிக்கும் முதல்வர் இருப்பதாலும், கேரள மக்களை சமாதானம் செய்யும் விதமாகவே மோடி கொச்சி சென்றதாக கூறப்படுகிறது.