22 மொழி இருக்கும்போது இந்திக்கு மட்டும் ஏன் தனிச் சலுகை.. கி.வீரமணி கேள்வி
சென்னை: இந்தியாவில் தேசிய மொழிகளாக 22 மொழிகள் இருக்கும்போது இந்திக்கு மட்டும் ஏன் தனிச் சலுகை வழங்கப்படுகிறது என்று கேட்டுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
‘கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மணையில் வை' என்ற பழமொழிக்கேற்ப, பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் உள்ள மத்திய அரசு, கடந்த ஒரு மாதத்தில், பழைய அரசு என்னென்ன செய்ததோ, அதற்கான எதிர்க் குரல் கொடுத்து, குற்றப் பத்திரிக்கையை பா.ஜ.க.வினர் எதிர்க் கட்சியாக இருந்து வன்மையாக கண்டனங்களைத் தெரிவித்தனரோ, அதே பாணியில் - அதே பாதையில்தான் இப்பொழுதும் செயல்பட்டு வருகின்றது!
1) உயரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் சுணக்கம்.
2) பெட்ரோலியப் பொருள் விலை தவணை முறையில் ஏற்றப்படுவது,
3) ரயில் கட்டண உயர்வு,
4) பதவிக்கு வந்தவுடன் முந்தைய ஆட்சியால் நியமிக்கப்பட்ட - ஆளுநர்களை வீட்டுக்கனுப்புதல் இப்படிப் பலப்பல.
5) இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அன்றாடம் சிறைப்பிடிக்கப்படும் அவலம்,
6) பாகிஸ்தான் பிரதமரை முந்தைய அரசு அழைத்தபோது ‘பிரியாணி சாப்பிட வருகிறாரா?' என்ற கேலியான விமர்சனம்; இன்று வந்ததும் வராததுமான அதே நிலைப்பாட்டால் விமர்சன முறையை எதிர்கொள்ளும் நிலை - இப்படிப் பலப்பல!
எந்த வகையில் வெளியுறவுக் கொள்கையில் காங்கிரசைவிட இவர்கள் வித்தியாசமானவர்கள்?
இதற்கிடையில், மிகவும் உணர்ச்சியைக் கிளறக்கூடிய மொழிப் பிரச்சினையாக மீண்டும் இந்தித் திணிப்பை - (மறைமுகமாகத்தான் என்றாலும்) வலைதளம் என்ற ஒரு சாக்கில் (Feeler விட்டுப் பார்ப்பதுபோல்) செய்துள்ள அவசரம் ஏனோ?
ஆர்.எஸ்.எஸ்.சின் சமஸ்கிருத மயமாக்கும் ஒரே மொழி அதுதான் என்ற முடிவுடன், அதற்கு நுழைவு வாயிலாக இப்படி ஒரு முயற்சியா என்ற கேள்வி, கண்டனக் குரல் தமிழகத்திலிருந்து அத்துணைக் கட்சி தலைவர்களாலும் எழுப்பப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கலைஞர் முதலில் அறிக்கை விட்டார்; பிறகு தமிழக முதல் அமைச்சர் மற்றும் கட்சித் தலைவர்கள் - கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் இந்தித் திணிப்பைக் கண்டித்து அறிக்கை விட்டவுடன், இதற்குச் சில போலி விளக்கங்களை மத்திய அமைச்சர்கள் சிலரும், துறையினரும் தரத் துவங்கியுள்ளனர்!
1. இந்தி பேசும் 8 மாநிலங்களுக்கான சுற்றறிக்கை அது என்றும் இந்தி பேசாத மாநிலங்களுக்கு அல்ல என்றும் கூறுவது விசித்திரமாக உள்ளது.
இந்தி பேசும் மாநிலத்திற்கு அதைப் பேசி கற்க இணையதளத்தில் முன்வந்தால், கூடுதல் சம்பள உயர்வு என்று அறிவிக்க வேண்டியது அவசியமா? இல்லையே! தென்னை மரத்தில் ஏறியவரை உரியவர் கண்டுபிடித்தவுடன், ‘புல் பிடுங்கத்தான் ஏறினேன்' என்ற கூறிய கதைபோல் இல்லையா இது?
2. ஏற்கெனவே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (U.P.A) அனுப்பியது தான் என்றால் அதை இப்போது உடனடியாக கவனிக்காமல் அனுப்பியவர் யார்? அந்த அதிகார வர்க்கத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
முந்தைய அரசினைத் தோற்கடித்து, மக்கள் இவர்களை ஆட்சியில் அமர வைத்துள்ள நிலையில், அதைப் பின்பற்றத்தான் இப்படி நடந்தது என்று ஒரு சமாதானம் கூறினால் இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது பழைய பழமொழி.
இப்போது "அரசர்கள்" (ஆளுபவர்கள்) இப்படி ஊதிக்கெடுக்கலாமா?
இன்னொரு முக்கிய செய்தி; இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தற்போதுள்ள 22 மொழிகளுள் சமஸ்கிருதம் - ஹிந்தி உட்பட குறிப்பிடப்பட்டுள்ளது; எதற்கும் தனித்த ஒரு தகுதி ‘தேசிய மொழி' என்று குறிப்பிடப்படவில்லை.
ஆட்சி மொழி ஹிந்தி (Official Language) என்றாலும்கூட இந்தி மொழி பேசாத மக்கள்மீது இப்படி மறைமுகத் திணிப்புக்கு இடம் அரசியல் சட்டத்தில் இல்லையே?
வலைதளம் மூலம் இளைஞர்களுக்கு மூளைச் சாயம் பூசவே இந்தப் புதிய ஏற்பாடோ என்ற அய்யம் ஏற்படுகிறது. இப்போது தலையை உள்ளுக்கிழுத்துக் கொண்டாலும், விழிப்புத் தேவை நமக்கு; மறவாதீர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.