ஜெயலலிதாவைப் பார்க்க அப்பல்லோவிற்கு விஜயகாந்த் போகலையே ஏன்?
சென்னை : உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என்று வாழ்த்திய விஜயகாந்த், இதுநாள் வரை அப்பல்லோவிற்கு நேரில் சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை... நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். 2006ம் ஆண்டு ஜெயலலிதா, "சட்டமன்றத்துக்கு குடித்துவிட்டு வருகிறார் விஜயகாந்த்" என்று குற்றம் சாட்டினார். அதற்கு காட்டமாக பதில் அளித்த விஜயகாந்த், "ஜெயலலிதாதான் எனக்கு மது ஊற்றிக் கொடுத்தாரா?" என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்த சண்டைகள் மறந்து 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்க அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஜெயலலிதா முதல்வராக அரியணை ஏறினார். விஜயகாந்த் எதிர்கட்சித்தலைவர் ஆனார். அதன்பிறகு சில மாதங்களில் சட்டசபையில் நடந்த சம்பவங்களை தமிழக மக்கள் அறிவார்கள்.

அப்பல்லோ வராத விஜயகாந்த்
அ.தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே இருந்த மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எல்லாம் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்ததில்லை. ஆனால், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டதால், எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தும் விஜயகாந்துக்குக் கிடைத்தது. முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 25 நாட்களுக்கு மேலாகியும் அவரோ, அவர் சார்பில் அவரது மனைவி பிரேமலதாவோ அப்பல்லோவிற்கு வரவில்லை என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

கருணாநிதி அறிக்கை
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் கருணாநிதியிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வெளியானது. "ஜெயலலிதா என்னுடன் கொள்கை அளவில் வேறுபட்ட போதிலும், அவர் உடல் நலம் பெற்று, வழக்கமான பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று விருப்ப அறிக்கை வெளியிட்டார்.

விஜயகாந்த் பிராத்தனை
விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் விரைவில் குணமடைந்து, தங்கள் பணிகளை மீண்டும் தொடர இறைவனிடம் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

அப்பல்லோ சென்ற மனைவி, மகன்
கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதியை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் ஜெயலலிதா. இவை எதையும் பொருட்படுத்தாமல் கருணாநிதி, அறிக்கை வெளியிட்டதோடு மட்டுமல்லாது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவைக் காண தன் சார்பில் மகன் மு.க.ஸ்டாலின், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரை அப்பல்லோவிற்கு அனுப்பி உடல் நலன் குறித்து விசாரித்தார்.

திருநாவுக்கரசர்
ஜெயலலிதாவின் முன்னாள் தளபதியாக இருந்து பின்னர் பிடிக்காதவராக போன திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆன பின்னர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் படத்தை வெளியிட வேண்டும்" என்று கருணாநிதி கேட்டபோது, தி.மு.க கூட்டணியில் இருக்கின்றோம் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் , முதல்வர் மருத்துவமனையில் இருப்பது போன்ற படங்களை வெளியிடத் தேவையில்லை" என்று பேட்டியளித்தார்.

அரசியல் தலைவர்கள்
அ.தி.மு.கவுக்கு எதிரணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள், கேரளா, பாண்டிச்சேரி மாநில அரசியல் தலைவர்கள் என அனைவரும் அப்பல்லோவிற்கு வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.

ராகுல், இளங்கோவன்
இதையெல்லாம்விட, சோனியா காந்தியை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும்போது ராகுல் காந்தியும் வந்து விசாரித்து விட்டுச் சென்றார். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றிருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் அப்பல்லோவிற்கு வந்து விசாரித்து சென்றார்.

விஜயகாந்த் வரலையே
எத்தனையோ தலைவர்கள் வந்து சென்ற பின்னரும் விஜயகாந்த் விசாரிக்க வரலயே ஏன் என்றுதான் பலரும் கேட்கின்றனர். அதற்காக காரணத்தையும் சிலர் கூறுகின்றனர். அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் 2012ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எங்களோடு இருந்ததால்தான் தேமுதிகவிற்கு வெற்றி முகம். இனிமேல் தோல்வி முகம், இறங்கு முகம்தான் என்று சவால் விட்டார் ஜெயலலிதா. அதிமுக - தேமுதிக கூட்டணி அன்றோடு முறிந்தது.

பறிபோன பதவி
இதன் தொடர்ச்சியாக விஜயகாந்தை தனிப்பட்ட முறையில் தாக்கி அதிமுக பேச்சாளர்கள் பேசினர். தேமுதிகவில் இருந்த எம்எல்ஏக்களை வரிசையாக ஜெயலலிதாவை சந்தித்தனர். சட்டசபை தேர்தல் நேரத்தில் விஜயகாந்தின் எதிர்கட்சித் தலைவர் பதவியும் பறிபோனது. இவையெல்லாம் விஜயகாந்த் மனதில் ஆறாத வடுவாய் இருப்பதினால்தான் அவர் அப்போலோ செல்லாமல் இருக்கிறார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

விஜயகாந்த் செல்வாரா?
அப்பல்லோவிற்கு விஜயகாந்த் செல்லாவிட்டாலும் பிரேமலதாவையாவது அனுப்பியிருக்கலாம். ஆனால் பிரேமலதாவையும் அப்போலோவிற்கு அனுப்பி விசாரிக்கவில்லை.
2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்தவர், எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தவர், இது போல முதல்வர் உடல் நலக்குறைவின்றி இருக்கும் விசாரித்தால் நல்ல அரசியல்வாதிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்கின்றனர். முதல்வர் குணமடைய வாழ்த்தி அறிக்கை விட்ட விஜயகாந்த் அப்போலோவிற்கு நேரில் செல்லவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications