கோடநாடு பக்கம், காலையிலேயே.. ரோட்டில் அசால்ட்டா போறது யாருன்னு பாருங்க.. உறைந்து போன நீலகிரி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோடநாடு எப்போதுமே செய்திகளில் இடம் பெற்ற ஒரு ஊர். இதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களா அங்கு அமைந்துள்ளது.
முதல்வராக இருந்த காலகட்டத்தில் கூட, தோழி சசிகலாவுடன் அவ்வப்போது ஓய்வு எடுப்பதற்கு கொடநாடு எஸ்டேட் செல்வது ஜெயலலிதாவின் வழக்கம்.
கிட்டத்தட்ட சென்னையிலுள்ள முதல்வர் அலுவலகம் அப்படியே இடம்பெயர்ந்து கோடநாடு சென்றுவிடும். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கோடநாடு செய்திகளில் இடம் பிடித்துக் கொண்டிருந்தது. காவலாளி மர்ம மரணம், தீ விபத்து என அவ்வப்போது பெரும் புயலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது இந்த குளிர்பிரதேசம்.
கோடநாடு ரோடு
நீண்ட நாட்களாக சத்தம் இல்லாத நிலையில் இப்போது இரண்டு கரடிகள் மூலமாக மீண்டும் பேசுபொருளாக உள்ளது கோடநாடு. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கோடநாடு பகுதி. கொடநாடு செல்லும் வழியில் ஆவக்கல் பிரிவு வார் வீக் என்ற ஏரியா உள்ளது. இங்கு இன்று காலை இரண்டு கரடிகள் என்று ஹாயாக சாலையில் வலம் வந்துள்ளன.
ஜாலி வாக்
அங்கே பார்த்துக் கொண்டிருந்த சிலர் செல்போனில் இதை வீடியோ எடுத்துள்ளனர். மாடுகளை விரட்டுவது போல சத்தம் போட்டு விரட்டி பார்த்தும், விடுவதாக இல்லை கரடிகள். தனியார் தேயிலை தோட்டத்திற்குள் அவை ஜாலியாக சென்றன. கரடிகள் ஆபத்தானவை. மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் சமீபகாலமாக கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வன விலங்குகள்
ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. எனவே வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு சாலைகளுக்கும், ஊர்களுக்கும் வருவது வாடிக்கையாகி விட்டது என்கிறார்கள் வனவிலங்கு ஆர்வலர்கள். இப்படித்தான் இரண்டு வாரங்கள் முன்பாக கோத்தகிரி அருகே பனகுடி என்ற கிராமத்தில் ராமன் என்பவர் வீட்டுக்குள் பட்டப்பகலில் கரடி ஒன்று புகுந்துள்ளது.
சிசிடிவி கேமரா காட்சி
வீட்டுக்குள் உணவு இருக்கிறதா என்று சுற்றி பார்த்து விட்டு அங்கே இருந்து கிளம்பி சென்றுள்ளது. கரடி வீட்டுக்கு வந்தபோது மற்றொரு அறையில் வீட்டின் உரிமையாளர்கள் இருந்ததால் அசம்பாவிதம் நடைபெறவில்லை. சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது சாலையில் 2 கரடிகள் ஹாயாக சுற்றி வருவது பார்ப்போரை பீதியடைய செய்துள்ளது.