பாஜக+பாமக+தமாகா... தமிழக அரசியலில் மேலும் ஒரு கூட்டணி பொறக்கப் போகுது?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிவதற்குள் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகுதோ தெரியவில்லை. அந்த அளவுக்கு தினசரி ஒரு பரபரப்பை மாநிலம் பார்த்து வருகிறது. இந்த நிலையில் பாஜக தலைமையில் புதிதாக ஒரு கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் கூடி வருவது போலத் தெரிகிறது.
யாராலும் சீண்டப்படாமல் போன பாஜகவும், அதே போல யாராலும் கண்டு கொள்ளப்படாமல், மதிக்கப்படாமல் போன தமாகவும் இணைந்து ஒரு கூட்டணியை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே பேச்சுகள் தொடங்கியுள்ளன.
அதிமுகவை நம்பி ஏமாந்து போன கட்சி தமாகா. அதேபோல தேமுதிவையும், கூடவே அதிமுகவையும் நம்பி மோசம் போன கட்சி பாஜக. இந்த இரண்டு பேரும் சேருவதில் எந்த முரண்பாடும் இல்லை என்று கூட சொல்லலாம்.
இந்த நிலையில் தனித்து விடப்பட்ட இருவரும் கை கோர்ப்பார்களா என்ற எதிரபார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கூட்டணியில் இன்னொரு முக்கியக் கட்சியாக பாமக சேரும் என்றும் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது. தமாகாவுடன் பேச்சு நடந்து வருவதை தமிழிசை உறுதிப்படுத்தியுள்ளார். அதேசமயம், பாமகவுடன் பேச்சு நடக்கிறதா என்பது குறித்து தகவல் இல்லை.
ஆனால் நடப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதன்படி பாஜக, பாமக, தமாகா இணைந்து தேர்தலை சந்திப்பது என்று திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்தக் கூட்டணியில் பாரிவேந்தர் என்ற பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இணையலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
தற்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி உள்ளது. இதில் அதிமுக தவிர 6 கூட்டணிக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல திமுகவும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
தேமுதிகவும், மக்கள் நலக் கூட்டணியும் முக்கியமான அணியாக களத்தில் நிற்கிறது.
பாமகவும், பாஜகவும் தனித் தனியாக தற்போது களத்தில் உள்ளன. இவை தமாகவுடன் இணைந்து கை கோர்த்தால் தமிழகத்தில் 5 முனை போட்டி என்பது மாறி 4 முனைப் போட்டியாக சுருஙகும் வாய்ப்புள்ளது.