ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போன ஜெ.வுக்கு பிரம்மாண்ட வரவேற்பு.. என்ன நடக்கிறது இங்கே?
- ஆழ்வார்க்கடியான்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளித்து சிறைத் தண்டனை அனுபவித்த ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த போது அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்ததை பார்த்த ஜனநாயகவாதிகள் மனதில் இது என்ன மாதிரியான சமூகம்? என்ற கேள்வி இயல்பாக எழவே செய்தது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிசம்பர் 18-ந் தேதி வரை "இடைக்கால ஜாமீன்" தான் கொடுத்தது ஜெயலலிதாவுக்கு. அத்துடன் டிசம்பர் 18-ந் தேதிக்குள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் ஆவணங்களைத் தாக்கல் செய்தாக வேண்டும்- ஒருநாள் தாமதமானாலும் ஜெயலலிதாவின் ஜாமீன் ரத்தாகிவிடும் என்று தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் எச்சரித்தும் இருக்கிறது.
தண்டனை அமலில் இருக்கையில் ஜாமீன் தர முடியாது என்பதால், தண்டனையை தாற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைப்பதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்பின்னர் ஜெயலலிதா இடைக்கால ஜாமீனில் விடுதலையானார். பெங்களூர் சிறையைவிட்டு வெளியே வந்த ஜெயலலிதாவுக்கு பழைய விமான நிலையம் செல்லும் வரை பெங்களூரில் முகாமிட்ட ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பூமழை தூவி வரவேற்கின்றனர்.
மனித சங்கிலி பூமழை
சென்னை திரும்பியதும் விமான நிலையம் முதல் போயஸ் தோட்டம் வரை மனித சங்கிலி போல் நின்று கொட்டும் மழைக்கிடையே பூமழை தூவி வரவேற்கின்றனர். குற்றச்செயலில் ஈடுபட்டு சிறைக்குப் போய்விட்டு வந்த தமக்கு இப்படி ஒரு ஆதரவு கொடுப்பதை முழு மனதுடன் விரும்புவராக காரில் "ராஜ உலா" வருவதைப் போல் மகிழ்ச்சியுடன் கையசைத்தபடியே பயணித்தார் ஜெயலலிதா.
கனிமொழிக்கும் இப்படி
இத்தகைய கலாசாரத்தை தொடங்கி வைத்தது திமுகதான் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி திகார் சிறையில் இருந்து விடுதலையான போது இதேபோல்தான் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்ட பெருங்கொடுமையை தமிழகம் கண்டது.
கிரிமினல் சட்டப்படி
இவர்கள் யாரும் எதிரி தேசத்தை வென்று திரும்பிய மன்னர்களும் அல்ல.. இந்த மண்ணின் உரிமைகளை மீட்டெடுத்த புரட்சியாளர்களும் இல்லை.. இந்திய அரசியல் சட்டப்படியும் கிரிமினல் சட்டப்படியும் விசாரணைக் கைதிகள்- குற்றவாளிகள் என்ற நிலையில் இவர்களுக்கு வரவேற்பு கொடுப்பதையும்ம் இத்தகைய அருவெறுப்பான வரவேற்பை இன்முகத்துடன் அவர்கள் ஏற்பதையும் எந்தக் கணக்கில் சேர்ப்பது?
துதிபாடல் அரசியல்தான்
இந்த தனிமனித துதிபாடல் அரசியல்தான் மூலம் தங்களது எதிர்கால அரசியலே இருக்கிறது என்பதற்காக நிர்வாகிகள் 'ஏற்பாடு செய்யும்' இந்தக் கூட்டமும், ஒப்பாரிகளும் ஊர்வலங்களும் இனிமேல் அரசியலில் தூய்மை; ஊழலற்ற அரசியல் போன்ற நியாயவாதங்கள் எல்லாம் எடுபடாது என்பதையே காட்டுகிறது.
அமைதி காக்கும் ஊடகங்கள்..
ஜெயலலிதாவின் இந்த வெற்றி ஊர்வலத்தை தமிழகத்தின் முக்கிய ஊடகங்களும், ஜெயலலிதாவுக்கு ஆதரவான மன நிலையில் செயல்படும் வட இந்திய ஊடகங்களும் சுட்டிக்காட்டி கண்டிக்கவும் இல்லை என்பது தான் வேதனை. தவறை சுட்டிக் காட்டாத இந்தத் தவறுகள் தான் ஜெயலலிதாவை சிக்கலில் மாட்டியது என்பதை சொல்லவும் வேண்டுமா?.கனிமொழிக்கு நடந்த ஊர்வலத்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது சென்னை என்றாவது சொன்னார்கள். ஜெயலலிதாவின் ஊர்வலம் குறித்து அதைக் கூட சொல்லவில்லையே. ஏன்?