யாருடன் கூட்டணி.. பாஜகவா.. காங்கிரஸா?.. குழப்பத்தில் பாமக!
சென்னை: சட்டசபைத் தேர்தல் வரும்போது கூட்டணி அமைப்பது குறித்து இப்போதே பாமக யோசிக்க ஆரம்பித்து விட்டதாம். ஆனால் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதுதான் அக்கட்சியின் குழப்பமாக உள்ளதாக சொல்கிறார்கள்.
திராவிடக் கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.க தனி அணி அமைக்கும் என பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்பார்க்கிறார். அதேசமயம், மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில் பா.ஜ.க நெருக்குதல் கொடுத்தால், காங்கிரஸ் பக்கம் போகலாம் என்ற மனநிலையில் இருக்கிறார் என்கின்றனர் பா.ம.கவினர்.
சட்டமன்றத் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்று, தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது பா.ம.க. தேர்தல் நேரத்தில், 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' எனத் தெருத் தெருவாக போஸ்டர்களைக் கொண்டு சென்றதில், நல்ல விளம்பரம் கிடைத்தாலும் ஓர் இடம்கூட கிடைக்காததில் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் ராமதாஸ். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து, நாடாளுமன்றத்துக்கான மேடை அமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது தி.மு.க. வழக்கம்போல, திராவிட எதிர்ப்பைக் கையில் எடுத்துக் கொண்டு, 'கழகத்தின் கதை' என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார் ராமதாஸ்.
ராமதாஸ் கோபத்திற்கு காரணம் உள்ளது
தி.மு.க, அ.தி.மு.கவுக்கு எதிராக ராமதாஸ் இந்தளவுக்குக் கொந்தளிப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தபோதும், 2011 ஆம் ஆண்டு தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டபோதும் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. இதற்குக் காரணம், இந்தக் கட்சிகளில் உள்ள மாற்று சமூகத்தினர் தங்களுக்கு வாக்களிப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்.
சொந்த சமூகத்து வாக்குகள் போதும்
எனவே, இவர்களுடன் கூட்டணி அமைப்பதைவிடவும், சொந்த சமூகத்து மக்களின் வாக்குகளை முழுமையாகக் கைப்பற்றும் வேலையில் இறங்கலாம் என முடிவெடுத்து அன்புமணியைக் களத்தில் இறக்கினார் என விவரித்த பா.ம.க நிர்வாகி ஒருவர், வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க தனியாக ஓர் அணியைக் கட்டமைக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார் அன்புமணி. அப்படி ஒரு கூட்டணி உருவானால், அவர்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இப்போதே பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்தால், தமிழக உரிமைகள் குறித்து தினம்தோறும் வெளியிடும் அறிக்கைகள் எல்லாம் போலி என்றாகிவிடும். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியைப் போல், பகிரங்கமாக பா.ஜ.க புராணம் பாடவும் முடியாது. எனவே, தேர்தல் நெருங்கும் வரையில் நடப்பதை கவனிப்போம் என்ற முடிவில் இருக்கிறார்.
அதிமுக கை கோர்த்தால்
அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் கை கோர்த்துவிட்டால், அவர்களை முன்வைத்து பா.ஜ.க தேர்தலை சந்தித்தால், பா.ம.க வேறு மாதிரி நிலை எடுக்க வேண்டியது வரும். காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க அணி சேர்ந்தால், அங்கும் செல்ல முடியாது. அப்படியே காங்கிரஸ் பக்கம் சென்று, நாங்கள் தி.மு.கவுடன் சேரவில்லை. காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறோம் எனக் கூறினாலும், சமூகத்து மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, வரக் கூடிய தேர்தலை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவித்து வருகிறார் அன்புமணி.
வெற்றி பெற்றாக வேண்டும்
இந்தத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், பா.ம.கவுக்கென எந்த அடையாளமும் இருக்காது என்ற எண்ணம் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, பா.ஜ.வுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் ராமதாஸ். குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்துப் பேசும்போதும், நதிநீர் விவகாரத்துக்கு தீர்வு காணப்பட்டால் ஆதரவு கொடுப்போம் என்கிறார். இப்படியே தொடர்ந்தால், அன்புமணி தொடர்புடைய இந்தூர் மருத்துவக் கல்லூரி ஊழல் விவகாரத்துக்கு, அமித் ஷா அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார் எனவும் அன்புமணி அச்சப்படுகிறார் என்றார் விரிவாக.
அமீத்ஷாதான் முக்கியம்
ஆனால், பா.ஜ.க நிர்வாகிகளோ, தமிழ்நாட்டில் இருக்கும்போதுதான், இவர்கள் மோடிக்கு எதிராகப் பேசுகிறார்கள். டெல்லிக்கு வந்து அமைச்சர்களை சந்திக்கும்போது, சரணாகதி அடைந்துவிடுகிறார்கள். இவர்களுடைய பா.ஜ.க எதிர்ப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதையும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். இவர்கள் வெளியிடும் அறிக்கைகளையும் நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. தேர்தல் நேரத்தில் அமித் ஷா எடுக்கும் முடிவே இறுதியானது. அதுவரையில், கட்சித் தலைமையின் முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியாது என்கின்றனர்.