ஜெயலலிதாவால் காலியான ஸ்ரீரங்கத்தில் போட்டியிடப் போவது இளவரசியின் மருமகன்?
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தின் இடைத்தேர்தல் ஜுரம் இப்பவே அரசியல் கட்சிகளை வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டது. தொகுதியின் எம்.எல்.ஏ உயிரிழந்தாலோ, அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோதான் இடைத்தேர்தல் வரும். தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக முதல்வராக இருந்த ஒருவர் ஊழல் வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போய் தனது எம்.எல்.ஏ பதவியை பறிகொடுத்த காரணத்தால் இப்போது இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது ஸ்ரீரங்கம்.
இதே இடைத்தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் செய்யத் தொடங்கிவிட்டன.
திமுகவில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருணாநிதிதான் அங்கே மூலவர் என்றாலும் துணை மூலவர் ஸ்டாலினின் பேச்சுதான் அங்கே எடுபடும் என்பதால் யாருக்கு டிக் அடிப்பார்களோ என்று ஆவலுடன் இருக்கின்றனர். பொது வேட்பாளரை போட்டியிட வைக்க வேண்டும் என்று பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதற்கு பாமக, பாஜக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகள் திமுக உடன் ஒத்துழைக்க வேண்டுமே?
ஜெயலலிதா
ஸ்ரீரங்கத்து நாயகி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பதவியிழப்பினால் வரும் இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் அதிக வாக்கு வித்தியாத்தில் இந்த தொகுதியை வென்றெடுக்க வேண்டுமே என்று அதிமுகவினர் இப்போதே வியூகம் வகுக்க ஆரம்பித்துவிட்டனர்.
கூட்டணி ஆணியே இல்லை
அதிமுக கூட்டணி கட்சிகளை நம்பியில்லை. ஒன்மேன் ஆர்மிதான் என்றாலும் வாக்கு வித்தியாசம் அதிகம் காட்ட வேண்டுமே என்பதுதான் அவர்களின் டார்கெட். எனவேதான் வெயிட்டான வேட்பாளரை நிறுத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறதாம்.
ஜாதி, சமூக வாக்குகள்
தொகுதியில் அதிகமாக உள்ள முத்தரையர் அல்லது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் ஒருவருக்குத்தான் சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே எந்த சிக்கலும் இல்லாத வேட்பாளராக இருக்கவேண்டும் என்று தலைமை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பிராமின் சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதாவுக்கு பிராமணர்களின் ஓட்டுகள் தானாகவே வந்துவிடும் என்று நம்புகின்றனர்.
யார் அந்த அதிர்ஷ்டசாலி
அதிமுக சார்பில் இங்கே போட்டியிடப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருச்சிக்காரரை விட தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதிலும் சசிகலா வட்டத்தைச் சேர்ந்த ஒருவராக அவர் இருக்கலாம் என்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுடன் கூட்டாக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு உடன் பிறவா சகோதரிகளான ஜெயலலிதா, சசிகலாவுடன் ஜெயலிக்குப் போன இளவரசியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான் அதிமுக வேட்பாளர் என்கிறார்கள்.
சசிகலா-இளவரசி
இளவரசியின் இரண்டாவது மருமகன் ராஜராஜன் தான் அந்த வேட்பாளர் என்று பேச்சு அடிபடுகிறது. சசிகலா குரூப்புக்கும், இளவரசி குரூப்புக்கும் ஏற்கனவே இருந்த வாரிசு போட்டியில் இம்முறை எப்படியும் தான் வென்றாக வேண்டும் என்று இரண்டு தரப்புமே காய் நகர்த்துகிறாராம்.
இளவரசிக்கே வாய்ப்பு
சசிகலாவின் அண்ணன் ஜெயராமனை திருமணம் செய்தவர் இளவரசி. இவருக்கு மூன்று பிள்ளைகள். கணவர் ஜெயலலிதாவின் ஹைதராபாத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்தபின்னர் மகன், மகள்களுடன் போயஸ்கார்டன் வந்துவிட்டார் இளவரசி.
இளவரசியின் மகள் மூத்த மகள் பிரியா, இரண்டாவது மகள் சகீலா, மகன் விவேக் ஆகியோருக்கு அனைத்து விதமாக வசதிகளையும் செய்து கொடுத்து அக்கறையோடு கவனித்தவர் ஜெயலலிதாதானாம். இவர்களுக்கு திருமணம் செய்து வைத்து செட்டில் செய்தவரும் ஜெயலலிதாதான் என்கின்றனர்.
இரண்டாவது மருமகன்
இதில் சகீலாவின் கணவர்தான் ராஜராஜன், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதாவிற்கு ஸ்ரீரங்கத்தில் தேர்தல் வேலைகளை பொறுப்பாக ஏற்று நடத்தியவராம் இந்த ராஜராஜன். எனவே இம்முறை அவரையே வேட்பாளர் ஆக்கினால் தொகுதிவாசிகளுக்கும் தெரிந்தவராக இருக்குமே என்றும் தலைமை யோசிப்பதாக கூறப்படுகிறது.
மகனா? மருமகனா?
இளவரசியின் மகன் விவேக் இருக்கையில் மருமகனுக்கு அதுவும் இளைய மருமகனுக்கு எப்படி வாய்ப்பு என்று கேட்பவர்களும் இருக்கின்றனர்.
ஜெயலலிதாவின் குட்புக்கில் ராஜராஜனுக்கு தனி இடம் உண்டாம் எனவேதான் அவரை வேட்பாளர் ஆக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான் ராஜராஜனின் நண்பர்கள் சிலர் இப்போதே ஸ்ரீரங்கம் தொகுதியின் மீது அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்து விட்டார்களாம். முடங்கியுள்ள திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளார்களாம்.
யார்? யார்?
ராஜராஜனை விட்டால் வேறு யார் வேட்பாளராக வாய்ப்பு உள்ளது என்று கேட்டால் ஸ்ரீ ரங்கத்தில் போட்டியிட பெரிய லிஸ்ட்டே இருக்கிறது
முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன், ஸ்ரீரங்கம் ஒன்றியச் செயலாளர் கோவிந்தன், அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் அழகேசன், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் முத்துகருப்பன், மகளிர் அணியைச் சேர்ந்த தமிழரசி, மணப்பாறை செல்வராஜ் ஆகியோர் அந்த வட்டாரத்தில் முகம் அறிமுகமான முக்கியப் பிரமுகர்களாக இருக்கிறார்கள்.
அம்மா ஆணையிட்டால்
ஜெயலலிதா தேர்தலில் நின்றபோது வேலை செய்வதற்காகப் பதவியை துறந்தவர் போலீஸ் உளவுத் துறை எஸ்.ஐ ஆக இருந்தவர் கே.ஸ்ரீதர். அவருக்கும் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட ஆசை இருக்கிறதாம். ஆனாலும் அம்மாவின் தொகுதியாச்சே எப்படி சீட் கேட்பது என்று யோசிக்கின்றனர் அதிமுகவினர். இங்கு இடைத்தேர்தல் தேதியே ஜனவரி மாதம்தான் அறிவிக்கப்படும் ஆனாலும் இப்போதே பரபரப்பு பற்றிக்கொண்டுவிட்டது ஸ்ரீரங்கம் தொகுதியில்.