போயஸ் கார்டன் கொண்டு செல்லப்பட்ட ஜெ. உடமைகள்.. முதல்வர் அறையை பயன்படுத்துவாரா ஓ.பி.எஸ்?
தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய முதல்வருக்கான அறையை பயன்படுத்துவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தலைமை செயலகத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் போயஸ் கார்டனிலுள்ள வேதா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே ஜெயலலிதா இருந்த முதலமைச்சர் அறைக்கு புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாறுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 5ம் தேதி காலமானார்.
பதவியேற்பு
புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அன்று நள்ளிரவே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 31 அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு கடந்த 3 நாட்களாக யாரும் தலைமை செயலகம் வந்து பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
அமைச்சர் பொறுப்பு
ஜெயலலிதாவுக்காக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்ததுள்ளதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலகத்தில் ஜெயலலிதா இருந்த அறைக்கு சென்று தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வாரா அல்லது ஏற்கனவே அவர் நிதி அமைச்சராக இருந்த அறையிலேயே முதல்வர் பதவியை கவனிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய முதல்வர்
இந்நிலையில், ஜெயலலிதா பயன்படுத்திய வந்த படங்கள், புத்தகங்கள், ஆவணங்கள், முக்கிய நினைவு சின்னங்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை போலீசார் நேற்று போயஸ் கார்டன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டனர். தற்போது முதல்வர் அறை காலியாக உள்ளது. புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த அறைக்கு வரும் 12ம் தேதி மாற வாய்ப்புள்ளது என கிசுகிசுக்கிறார்கள்.
முன்பு அப்படி
கடந்த வருடம், ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு, முதல்வர் பதவியை இழந்த போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அப்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் அறையை பயன்படுத்தவில்லை. அவர் நிதி அமைச்சராக இருந்த அறையிலேயே இருந்து முதல்வர் பொறுப்புகளை கவனித்தார். அலுவலக வாயிலில் முதல்வர் பன்னீர்செல்வம் என்ற போர்டு கூட வைக்காமல் இருந்தார்.