ம.ம.க. அவுட்… மதில்மேல் பூனையாக விடுதலை சிறுத்தைகள்: மல்லுக்கட்டும் மக்கள் நலன் கூட்டியக்கம்
சென்னை: ஆறுபேர் இணைந்து உருவாக்கிய கூட்டு இயக்கம் ஐவர் ஆகி இப்போது நால்வரில் வந்து நின்றுள்ளது. மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தில் இருந்து மனித நேய மக்கள் கட்சி இறுதியாக வெளியேறிவிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கிட்டத்தட்ட மதில்மேல் பூனையாக தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் கூட்டணியாக இன்று அறிவிக்கப்பட உள்ள மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தில் தலைமையேற்பது யார்? முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் எழுந்துள்ள குழப்பமே கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எனினும் திருவாரூர் கூட்டத்தில் பங்கேற்க திருமாவளவன் ஊசலாட்டத்துடனேயே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
6 கட்சிகள் கூட்டு
மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காந்திய மக்கள் இயக்கம் ஆகிய, ஆறு கட்சிகள் இணைந்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தை உருவாக்கின. இலங்கை தமிழர்கள் பிரச்னை,ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு, தொடர்பாக நடைபெற்ற சில போராட்டங்கள், கூட்டங்கள் ஆறு கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக பங்கேற்றனர்.
அரசுக்கு எதிராக போரட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டதன் பலனாக மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை எதிர்க்க இந்த கூட்டு இயக்கம் உருவாக்கப்பட்டது. மீத்தேன் எரிவாயு திட்டம், தனியார்மயம், காவிரி நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த கூட்டு இயக்கம் இணைந்து குரல் கொடுத்தன.
விலகிய கட்சிகள்
திடீரென்று கூட்டு இயக்கத்தில் இருந்து காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், விலகினார். இந்நிலையில், மக்கள் நல கூட்டணியில் இருந்து மனித நேய மக்கள் கட்சியும் விலகியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள்
மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக உருவாகி சட்டசபை தேர்தலை சந்திப்பதற்குள் பல குழப்பங்கள் உருவாகியுள்ளதாக தெரிகிறது. அவசர கதியில் இல்லாமல் கலந்து ஆலோசித்து குறைந்த பட்ச செயல்திட்டங்களை வரையறுத்துக்கொண்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வேண்டும் என்கிறார் திருமாவளவன்.
யாருடன் கூட்டணி
அ.தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் இடம் பெற வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தலைமையில், ரகசிய பேச்சு நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தி.மு.க., கூட்டணியில் மீண்டும் திருமாவளவன் சேர வேண்டும் என, டெசோ உறுப்பினர்கள் சிலர் பேச்சு நடத்தி உள்ளதாகவும் தெரிகிறது. அதனால் தான், காஞ்சிபுரத்தில், சனிக்கிழமையன்று, மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்கிய, மதிமுக பொதுச்செயலர் வைகோவை வரவேற்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் செல்லவில்லை என, கூறப்படுகிறது.
வேர்களைத் தேடி பயணம்
இந்த நிலையில் பாமக, திமுக, மதிமுக போல திருமாவும் அடுத்த மாதம் முதல் மக்களைச் சந்திக்க மாவட்டம் தோறும் ‘வேர்களைத் தேடி' பயணம் செய்ய இருக்கிறார். சட்டசபை தேர்தலுக்காக பொறுப்பாளர்களை நியமித்து விட்டு, கட்சியினரிடம் கலந்து ஆலோசித்து விட்டே தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் வந்த திருமா
இதனிடையே திருவாரூரில் நடைபெறும் கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், இன்று காலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்றுள்ளார். அதுவும் சற்றே ஊசலாட்டத்துடன் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.